சந்திரயான் வெற்றிக்கு 'திருக்குறளும்' முக்கிய காரணமா? மயில்சாமி அண்ணாதுரை சொன்ன சக்சஸ் சீக்ரெட்
கோயம்புத்தூர்: விண்வெளித்துறையில் இந்தியா சாதித்து வரும் நிலையில், சந்திரயான் வெற்றிக்கு திருக்குறள் முக்கிய காரணம் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல் உலகத்தையும் தாண்டி சாமானிய மக்களும் இதனை கொண்டாடி வருகின்றனர். நிலவு குறித்த ஆய்வுக்கு முதலில் வித்திட்டது சந்திரயான் 1 திட்டம்தான். இந்த திட்டத்தின் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றியுள்ளார். ரூ.386 கோடியில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மகத்தான வெற்றி பெற்றது. அதாவது கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதியன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நிலவை நோக்கி ஏவப்பட்டது.
312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய இந்த சந்திரயான் 1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டுபிடித்து சொன்னது. அதன் தொடர்ச்சியாகதான் சந்திரயான் 2, சந்திரயான் 3 ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த வெற்றிகளுக்கு பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகள் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைகழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், "அடுத்த தலைமுறைக்கான அமெரிக்காவாக இந்தியா உருவாகும்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, "நிலவுக்கு சோவியத் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் சென்றுவிட்டன. ஆனால் நாம் நிலவுக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தபோது அவர்கள் போன வழியிலேயே போகக்கூடாது என்று நினைத்தோம். நிலவில் என்ன இருக்கிறது என்பதை இந்த நாடுகள் சொல்லியிருந்தாலும், நாம் அதை உறுதி செய்ய வேண்டும். அறிவியலும் அதைத்தான் சொல்கிறது. எனவே நாங்கள் புதிய வழியில், தனி வழியில் நிலவை சென்றடைந்தோம்.
இதன் பலனாகதான் நிலவில் நீர் இருப்பதற்கான சாத்திய கூறுகளை நாம் கண்டுபிடித்தோம். தனி வழியில் போனதால்தான் அவர்கள் பார்க்காத இடத்தில் நம்மால் நீர் இருப்பதற்கான சாத்திய கூறுகளை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. இதற்கு அடிப்படையாக இருந்தது, எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' எனும் குறள்தான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications