வேலையை ஆரம்பித்த தாமரை.. கொங்கு மண்டலத்தில் தொடங்கிய பாஜக "ஆபரேஷன்".. நட்டா சொன்னது என்ன?
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கிட்டத்தட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். நேற்று கோவையில் பேசிய அவர் திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
அதோடு கொங்கு மாவட்டங்களில் பாஜக வெல்வது தொடர்பாக முக்கியமான சில ஆலோசனைகளையும் ஜேபி நட்டா பாஜக நிர்வாகிகளுடன் மேற்கொண்டு உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் நிலவி வருகின்றன. பாஜக மீது கடுமையான விமர்சனங்கள், விவாதங்கள் இணையத்தில் வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் பற்றி காயத்ரி ரகுராம் விமர்சனங்களை வைத்தார். அதேபோல் திருச்சி சூர்யா விவகாரமும் கட்சிக்குள் மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் மாற்றமா? நோ சான்ஸ்.. பகல் கனவில் பாஜக.. பிரதமர் மோடி, ஜேபி நட்டா மீது வைகோ ‛அட்டாக்’
நட்டா
இந்த உட்கட்சி விவகாரங்களுக்கு இடையில்தான் நட்டா நேற்று கோயம்புத்தூர் வந்தார். நேற்று மாலை கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நட்டா, தமிழ்நாட்டில் தாமரை மலரும். தமிழத்தில் உட்கட்டமைப்பு வசதி சரியாக இல்லை. மக்களுக்கு வேலை இல்லை. இங்கே உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றால் பாஜக தேவை. அதற்கு தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே ஆக வேண்டும். இதுதான் இப்போது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மக்கள் திமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மாபெரும் வெற்றிபெறும். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் வரப்போகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் விரைவில் நடக்கும். திமுக என்றால் மாநில கட்சி கிடையாது. அது ஒரு குடும்பத்தின் கட்சி. d என்றால் dynasty.. m என்றால் மணி.. k என்றால் கட்ட பஞ்சாயத்து. இப்படிப்பட்ட திமுகவிற்கு மக்கள் இனியும் ஆதரவு தர மாட்டார்கள். தமிழ்நாட்டில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது, என்று நட்டா தெரிவித்தார்.
என்ன சொன்னார்?
இந்த கூட்டத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பாஜக டாப் நிர்வாகிகளிடம் நட்டா பேசி இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் உள்ள எம்பி தொகுதிகள் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருந்து 5 எம்பிகளாவது வெற்றிபெற வேண்டும். குறைந்தது 1 மத்திய அமைச்சராவது கொங்கு மண்டலத்தில் இருந்து வர வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். கூட்டணியில் இடம் கிடைக்குமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை மேலிடம் பார்த்துக்கொள்ளுங்கள். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம்.
கூட்டணி
நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெல்வதை பற்றி யோசியுங்கள். கொங்கு மண்டலத்தில் பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்துங்கள். ஒவ்வொரு பூத்திற்கும் குறைந்தது 10 ஆட்களாவது இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பாஜகவிற்கு வர வேண்டும். இதற்கான பணிகளை தீவிரமாக செய்யுங்கள் என்று நட்டா உத்தரவிட்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரபூர்வ பிரச்சாரத்தை நேற்றே பாஜக தொடங்கிவிட்டது. இனி வரும் நாட்களில் கொங்கு மண்டலத்தில் அந்த கட்சி தீவிர கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.