பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்து ஆதரவு கேட்ட கமல் - விபூதி கொடுக்கலையே
மத நல்லிணக்கத்துக்காக கமல்ஹாசனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியுள்ளார்.
கோவை: பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன் ஆதரவு கோரியுள்ளார். கமலுக்கு வாழ்த்து கூறிய சாந்தலிங்க மருதாசல அடிகளார், மத நல்லிணக்கத்துக்காக கமல்ஹாசனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். நடந்து சென்று வீதி வீதியாக வாக்கு சேகரிக்கிறார். அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
இஸ்லாமிய ஜமாத் தலைவர்கள், கிறிஸ்தவ பிஷப் மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டிய கமல்ஹாசன், நேற்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்தார்.
பேரூர் ஆதினத்துடன் கமல் சந்திப்பு
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட முடிவெடுத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த மருதாசல அடிகளார், கமல்ஹாசனின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவருவதாக கூறினார்.
மத நல்லிணக்கம்
மத நல்லிணக்கத்துக்காக கமல்ஹாசனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்றும் பாராட்டிய பேரூர் ஆதினம், மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக அதிக செய்திகளை சொல்கிறீர்கள், சொல்லும் விஷயங்களை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெண்கள் முன்னேற்றம்
சமூகத்தின் அடிமட்டத் தில் உள்ள மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும், அப்படியான ஒரு நிலையை தொடர்ந்தால், மறுமலர்ச்சியை எதிர்பார்க்க முடியும். பேரூர் தமிழ்க் கல்லூரி மூலமாகவும், நிர்வாகம் மூலமாகவும் கிராம சபை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்றவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என்றும் ஆதினம் தெரிவித்தார்.
விபூதி கொடுக்கவில்லை
நிச்சயமாக சொல்லும் விஷயங்களை செயல்படுத்துவேன் என்று ஆதினத்திடம் கமல்ஹாசன் கூறினார். வழக்கமாக தன்னை சந்திக்க வருபவர்களுக்கு விபூதி கொடுப்பார் ஆதினம். நேற்று கமலுக்கு அவர் விபூதி பூச கொடுக்கவில்லை. கமல் விபூதி பூசிக்கொள்ள மாட்டார் என்பதால் அவர் கொடுக்காமல் விட்டிருக்கலாம் என்று ஆதின வட்டார தகவல்கள் தெரிவித்தன.