நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள்.. அரசு வேடிக்கை பார்க்கிறது.. கிருஷ்ணசாமி
கோவை: மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அரசியல் உள்நோக்கத்தோடு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏற்புடையதல்ல என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் தற்போது அவரைச் சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்குரியது என்றும் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றானது திருப்பரங்குன்றம். அதன் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றிட அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டார். வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாதகமான தீர்ப்பு என்றே கருத வேண்டும். எனவே, இதில் கோயிலுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியவுடன், அரசுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தபட்சத்தில், உடனடியாக அன்றே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். அதை விடுத்து கோயில் நிர்வாக அதிகாரியை வைத்து முறையீடு செய்ததும், நீதிமன்ற விசாரணையின்போது அவர் பின்வாங்கியதும் புதிராக உள்ளது.
மேலும் மேல்முறையீடு செய்வதென்றால் அங்குள்ள தர்கா நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால் பிரச்சினை பெரிதாக எதுவும் எழுந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல மோட்சத் தூணில் மட்டும் ஏற்றியது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும்.
தமிழ் கடவுள்களில் முதல் கடவுளாகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி, 144 தடை உத்தரவு விதித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றத் தடை செய்து பிரச்சனையைப் பெரிதாக்கியது ஏற்புடையதல்ல!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சனையில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளித்திருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் தற்போது அவரைச் சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்குரியது" இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications