40 இடங்களில் அரிவாள் வெட்டு.. கோவையில் வழக்கறிஞர் கொடூர கொலை
கோவை: கோவை மாவட்டம், மயிலேரிபாளையத்தில் வழக்கறிஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் 40 இடங்களில் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க கோவை ரூரல் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.உதயகுமார் (வயது 48). கோவை மாநகரில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி டாக்டர் நித்தியவள்ளி கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

பொள்ளாச்சிக்கு காரில் செல்ல திட்டமிட்டுள்ளதாக உதயகுமார் தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் தனது வீட்டில் இருந்து தனது செடான் காரில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில், மயிலேரிபாளையம் அருகே உள்ள கோழிப்பண்ணை முன்பு இன்று மதியம் 12 மணியளவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரில் பயணித்துள்ளதும், கோழிப் பண்ணை அருகே காரில் இருந்து இறங்கச் சொல்லி அந்த கும்பல் அவரை அரிவாளால் தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதில், கழுத்து மற்றும் மார்பில் 40க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சடலத்தை அப்பகுதியிலேயே விட்டுவிட்டு அவரது காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததனர். சூலூர் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியன் மற்றும் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளைப் பிடிக்க காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக எங்களுக்கு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. எங்களது சிறப்பு குழுக்கள் விரைவில் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் என்று எஸ்பி பத்ரிநாராயணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications