எங்கப்பா டயரையே காணோம்.. கோவை அருகே புத்தம்புது ரோட்டில் புதைந்த செங்கல் லாரி.. பெரும் பரபரப்பு!
கோவை: கோவை அருகே சுண்டக்காமுத்தூர் வாய்க்கால்பாளையம் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலையில் லாரியின் சக்கரங்கள் திடீரென சாலையில் புதைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் - புட்டுவிக்கி சாலையில் வாய்க்கால்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இப்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. அங்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பழனியில் இருந்து சுமார் 5 ஆயிரம் செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி வாய்க்கால் பாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையில் புதைந்தது. லாரியின் முன் டயர் ரோட்டில் புதைந்ததை அறிந்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு குதித்தார்.
தொடர்ந்து, பின் புற டயரும் தார் ரோட்டில் இறங்கியது. இடது புறத்தின் முன் இரண்டு சக்கரங்களும் தார் ரோட்டில் புதைந்ததால் லாரி அப்படியே சாலையில் சாய்ந்து நின்றது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் பொக்லைன் மூலம் சாலையில் புதைந்த லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
ஆனால் அதிக பாரம் இருந்ததால் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து புட்டுவிக்கி சாலைக்கு ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு, வேறு லாரியில் செங்கல்கள் மாற்றப்பட்டு லாரியை மீட்கும் முயற்சி நடைபெற்றது. நடுரோட்டில் புதைந்து கிடந்த சரக்கு லாரியை பத்திரமாக மீட்டு, அங்கு போக்குவரத்தை சீர்படுத்தினர்.
தார் ரோடு போட்ட சில நாட்களிலேயே லாரி நடு ரோட்டில் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தரமற்ற முறையில் சாலைகள் போடப்படுவதாகவும், பயணிக்கும் வாகன ஓட்டிகள் உயிர் அச்சத்துடனே போக வேண்டி இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications