காலேஜ் படிக்கிற பசங்க பண்ற வேலையா இது?.. பெட்டிங் ஆப்.. காதல் ஜோடி கைது.. கோவையில் பரபரப்பு
கோவை: கோவையில் பெட்டிங் செயலி மூலம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதாக காதல் ஜோடியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவர் கடந்த 28ஆம் தேதி தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே ஒரு இடுகாட்டில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். அவருக்கு பின்னால் ஒரு இளைஞரும் உட்கார்ந்திருந்தார். இருவரும் மூதாட்டியிடம் முகவரி கேட்டுள்ளனர்.

முகவரி கேட்ட ஜோடி
அப்போது காளியம்மாள் முகவரி சொல்லிக் கொண்டிருக்கும் போது அந்த தம்பதி அவரின் கழுத்திலிருந்த ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படைகள்
மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் தீயணைப்பு அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்தன. இதில் காதல் ஜோடியை போலீஸார் கைது செய்தனர்.

சோமையம்பாளையம்
சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் (20), அவரது காதலியான மேற்கு சங்கம் பைபாஸ் சாலையை சேர்ந்த தேஜஸ்வினி (20) ஆகியோர் நகைப் பறிப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து பிரசாத் மற்றும் தேஜஸ்வினி ஆகிய இருவரையும் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

பகீர் தகவல்
விசாரணையில் பல பகீர் தகவல்கள் கிடைத்தனர். கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள பச்சைபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிரசாத், பிடெக் படித்து வருவதும் அதே கல்லூரியில் தேஜஸ்வினியும் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.

தேஜஸ்வினி
பிரசாத் சூதாட்டத்தின் மூலம் பணத்தை இழந்ததால் கடன் அதிகமாகிவிட்டதும் கடனை அடைக்க தேஜஸ்வினியுடன் இணைந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் தொண்டாமுத்தூர் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஐந்தரை பவுன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications