யானை வழித்தடத்தில் மண் கொள்ளை! விசாரணையில் முன்னேற்றம் இல்லை.. நீதிமன்றம் அதிருப்தி
சென்னை: கோவை யானை வழித்தடங்களில் சட்டவிரோதமாக மண் அள்ளியது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவையில் யானை வழித்தடங்களில் சட்டவிரோதமாக 5 லட்சம் கனமீட்டர் பரப்புக்கு மண் அள்ளப்பட்டது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் இந்த உத்தரவில் சட்டவிரோத மண் கொள்ளை நடத்த பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக பணியில் இருந்த வருவாய், காவல்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த 4 ஆண்டுகளாக பணியில் இருந்த வருவாய், காவல்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டதை மறு ஆய்வு செய்ய கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை முடக்கும் நோக்கில் இந்த மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என்றும் அரசு தரப்பில் தெளிவுப்படுத்தப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து 3 ஆண்டுகள் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அலுவலகம், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 18 வழக்குகளில் 8 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 17ம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications