சூலூர் சிறுமி வழக்கு.. சரியான ரூட்டில்தான் போகிறது.. தமிழக அரசை மெச்சிய உயர் நீதிமன்றம்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பான வழக்கில் மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் முக்கிய கருத்துகள் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த மே 21ஆம் தேதி சூலூர் பகுதியில் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் அண்டை வீட்டுக்காரரான கார்த்திக் (33) மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் (31) ஆகிய இருவரும் காவல்துறையினரால் விரைவில் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் இருவரும் ஜூன் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய மூத்த போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வழக்கை தீவிரமாக விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குற்றத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் அடையாளம் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவாமல் தடுக்க இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் இந்த வழக்கை மிக முக்கியமான வழக்காக கருதி விரைந்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவு நீதி வழங்க அரசு முழு முயற்சி எடுக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசின் பதில் மனு மற்றும் காவல்துறை சேகரித்த ஆதாரங்களை பரிசீலித்த பின்னர், விசாரணை சரியான பாதையில் செல்வதாக தெரிவித்தனர். "எல்லா நேரங்களிலும் போலீசாரின் நடவடிக்கைகளை சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தற்போதைய விசாரணை திருப்திகரமாக உள்ளதால் வழக்கை சில நாட்கள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதன் மூலமே இதுபோன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசும் காவல்துறையும் இந்த வழக்கில் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால், விரைவில் வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications