“பொற்கொல்லரை” அவமதிச்சுட்டாங்க.. கோவை மேல்பாலத்தில் கண்ணகி ஓவியத்தில் தார் பூச்சு! கைது செய்த போலீஸ்
கோவை மேம்பால தூண்களில் வரையப்பட்ட கண்ணகி ஓவியங்களின் தார் பூசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களை அழகுபடுத்த வரையப்பட்டு இருக்கும் ஓவியங்களின் தார் பூசிய விஷ்வஜனா முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் நிறுவனரை போலீசார் கைது செய்து உள்ளனர். தமிழ் இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களின் ஓவியங்களை அந்த நபர் அழித்ததது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் மேம்பாலங்களின் தூண்களின் அரசியல் கட்சிகள், சினிமா நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு போஸ்டர்களை ஒட்டுவதால் அவை பொழிவிழந்து காணப்படுகிறது.
இதற்கு அரசு, உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் தடை விதிக்கப்பட்டாலும் மீறி போஸ்டர்களை ஒட்டுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதனால் கால்நடைகளும் அதை சாப்பிட்டு பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றன.

ஓவியங்கள்
இந்த நிலையில், மேம்பாலங்கள், அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில் அழகிய ஓவியங்கள் வரையப்படுகின்றன. அந்த வகையில் கோவையிலும் மேம்பாலத்தின் தூண்களிலிலும் சுவர்களிலும் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு அவை பொழிவோடு காட்சித் தருகின்றன.

காந்திபுரம் மேம்பாலம்
குறிப்பாக கோவை காந்திபுரத்தில் உள்ள மேம்பாலத்தின் தூண்களில் தமிழ்நாட்டின் வரலாறு, இலக்கியத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள 4 தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களின் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

ஐம்பெரும் காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகிய ஐந்து பெரும் காப்பியங்களின் கதைகள் ஓவியமாக மேம்பால தூண்களில் வரையப்பட்டு இருப்பது பலரை கவர்ந்தது. இந்த நிலையில் இந்த ஓவியங்கள் பொற்கொல்லர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கோவலன் இறப்புக்கு காரணம்
சிலப்பதிகாரத்தில் கோவலன் இறந்ததற்கும் பொற்கொல்லர்களே காரணம் என்றும் அவர்கள் திருடியதாகவும் தவறாக சித்தரித்து ஓவியங்கள் வரையப்பட்டதாக விஷ்வஜனா முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் சார்பில் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் அந்த அமைப்பின் நிறுவனரான வேல்முருகன் அந்த ஓவியங்களை தார் பூசி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதான வேல்முருகன்
இதனால் பொழிவொடு இருந்த அந்த இடம் தார் பூசப்பட்டு மீண்டும் அலங்கோலமாக மாறி இருக்கிறது. இந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் கண்ணகி ஓவியத்தில் தார் பூசிய விஷ்வஜனா முன்னேற்றக் கழக நிறுவனர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications