கோவையில் காவல் நிலையத்துக்குள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - போலீஸார் விசாரணை
கோவை: கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் நேற்று இரவு 55 வயது மதிக்கத்தத்க நபர் ஒருவர் புகார் அளிப்பதற்காக வந்த நிலையில், அவர் காவல் நிலையத்துக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேர காவல் பணியில் இருந்தவர்களிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவலர் செந்தில்குமார் பணியில் இருந்த போது காவல் நிலையத்திற்கு தற்கொலை செய்து கொண்ட நபரான ராஜன் என்பவர் வந்துள்ளார். காவலரிடம் பேசியவர் பின்னர், அவருக்கு தெரியாமல் மாடியில் உள்ள அறைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டது யாருக்கும் தெரியவில்லை.
காலையில் பணிக்கு காவலர்கள் வந்த பொழுதுதான் அறைக்குள் யாரோ இருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்த போது அந்த நபர் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த இருக்கின்றார். உயிரிழந்த நபர் சிசிடிவி காட்சிகளில் பேருந்தில் வந்து போத்தீஸ் கார்னர் பகுதியில் இறங்குகிறார். 11.19 மணிக்கு காவல் நிலையத்திற்கு வருகின்றார்.
இறந்தவர் பாக்கெட்டில் இருக்கும் டைரியை பார்த்த போது இறந்தவர் ராஜன் என்பதும் சாமிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ராஜன் கடந்த 10 நாட்களாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்திருப்பது, அவரது குடும்பத்தினரிடம் பேசியதிலிருந்து தெரியவந்தது. நீதிபதி விசாரணை நடந்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்.
சம்பந்தப்பட்ட காவலர்கள், பணியின் போது அலட்சியமாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கவனக் குறைவாக இருப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது லாக்அப் டெத் என சொல்ல முடியாது. காவல் நிலையத்தில் நடந்த தற்கொலை. இறந்தவர் மீது வழக்குகள் ஏதாவது இருக்கின்றதா என்பது குறித்து இனிமேல் தான் பார்க்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து காவல் நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று 06.08.2025-ஆம் தேதி கோவை மாநகர், பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் மேற்படி காவல் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் வேட்டியில் தூக்கிட்டு கொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
இத்தகவலின் பேரில் காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்த வகையிலும், CCTV தரவுகளின் அடிப்படையிலும் இறந்து போன நபர் கோவை மாவட்டம், பேரூர், ராமசெட்டிப்பாளையம், காமராஜர் நகரைச் சேர்ந்த ராஜன் என்கின்ற அறிவொளி ராஜன் (60), த/பெ. அம்மாசை என்பதும், அவருடன் பிறந்த சகோதரி வீரமணி மற்றும் அவரது வயதான தாயாருடன் வசித்து வருவதாக தெரிய வருகிறது. மேற்படி இறந்து போன நபர் திருமணம் ஆகாதவர், சென்டிரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக அவரின் நடவடிக்கை மற்றும் மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும், தன்னை யாரோ கொல்ல வருவதுபோல் உள்ளது என்றும் அவரது மூத்த சகோதரியிடம் கூறியதாக தெரியவருகிறது.
இந்நிலையில் நேற்று 05.08.2025-ஆம் தேதி இரவு சுமார் 11.19 மணியளவில் மேற்படி நபர் கடைவீதி காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தவரை அங்கிருந்த காவலர் 2201 செந்தில் அவரை விசாரித்த போது அவரது மனநிலை சரியில்லாமல் இருப்பதை கண்டு அவரை வெளியில் அழைத்து சென்று அனுப்பியுள்ளார். அதன் பிறகு மேற்படி இறந்து போனவர், காவலருக்கு தெரியாமல் காவல் நிலையத்தின் முன்பகுதியில் இருந்த படிக்கட்டு வழியாக முதல் மாடிக்கு சென்று அங்கு உள்ள உதவி ஆய்வாளர் அறையில் புகுந்து கொண்டு, தாழ்ப்பாளை தாளிட்டு விட்டு, உதவி ஆய்வாளர் மேசை மீது நாற்காலியை வைத்து அதன் மீது ஏறி அங்கிருந்த மின்விசிறியில் தனது வேட்டியை கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று 06.08.2025-ஆம் தேதி காலை சுமார் 08.00 மணியளவில் நிலைய பாராவில் இருந்த காவலர் செந்தில் குமார் என்பவர் அலுவல் நிமித்தமாக முதல் தளத்திற்கு சென்று உதவி ஆய்வாளர் கதவை திறக்க முற்பட்ட போது உட்புறம் தாளிட்டு கதவு மூடப்பட்டு இருந்தது. கதவை தட்ட உட்புறம் திறக்காததால் இரவு காவலரகள் உள்ளே இருந்த கழிவறைக்கு சென்றபோது மயங்கி இருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு கதவை உடைத்து திறந்து பார்த்தபோது மேற்படி இறந்து போன நபர் தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளதை கண்டுள்ளார்.
உடனடியாக அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவம் இடமாகிய கடைவீதி காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் உட்பட அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்து தடய அறிவியல் துறை நிபுணர்கள், புகைப்பட நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறந்து போனவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications