நான் பரிந்துரை கடிதம் கொடுத்தா.. கம்பெனி கேட்டில்கூட விடமாட்டாங்க.. உண்மையை கலகலப்பாக சொன்ன அமைச்சர்
கோவை: நான் ஏதாவது ஒரு பிரபல நிறுவனங்களுக்கு வேலைக்கு பரித்துரை கடிதம் கொடுத்தால், அந்த நிறுவனத்தின் கேட்டிலேயே விட மாட்டார்கள், போய் சேரவே முடியாது எனவும் , கடிதம் வாங்கியவர்கள் படாத பாடு பட்டு விடுவார்கள் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலகலப்பாக நகைச்சுவையாக தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பேசினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா கோவை தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கை இருந்தது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் 238 வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறோம். முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பல்வேறு தொழில் முதலீடுகள், நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஐந்து லட்சம் பேருக்கு மேலானோருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை மொத்தமாக உருவாக்கி உள்ளோம்.
அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 75 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முதல்வர் திட்டமிட்டிருக்கிறார். முதன்முதலில் வேலைவாய்ப்பு முகாம் அண்ணன் உதயநிதி தொகுதியில் துவக்கிவைக்கப்பட்டது. அப்போது, எனக்கு வேலைவாய்ப்பு முகாம் என்றால் என்ன என்று கூட தெரியாது. அவருடன் சென்று தான் வேலை வாய்ப்பு முகாம்கள் குறித்து தெரிந்து கொண்டேன். தொழிலாளர் நலத்துறை ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டு முயற்சியுடன் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
யாருக்காவது வேலைக்காக எம்.பி. பரிந்துரை கேட்டால் நான் ஏதாவது ஒரு பிரபல நிறுவனங்களுக்கு கடிதம் கொடுப்பேன். ஆனால், அந்த நிறுவனத்தின் கேட்டில்கூட விடமாட்டார்கள். வேலைக்குப் போய் சேரவே முடியாது. கடிதம் வாங்கியவர்கள் படாதபாடுபட்டு விடுவார்கள். வேலை கொடுக்கிறார்களா இல்லையா என்பது இரண்டாவது பட்சம். இவ்வாறு வேலைக்குச் செல்பவர்கள் சம்பளம் பத்தவில்லை, வேறு வேலைக்கு போகலாமா என யோசிப்பார்கள். இதையெல்லாம் நீக்குவதற்காக வேலைவாய்ப்பு முகாம்கள் உருவாக்கி பயன்பெற செய்திருக்கிறோம்.
வேலை இல்லை என்பதைக் களையும் வகையில், வெளிநாடுகளில் இருந்து முதலீடு ஈர்க்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. மூடப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் திறக்க வைத்தவர் முதல்வர். கடுமையாக யார் முயற்சிக்கின்றார்களோ அவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றார்.
தொடர்ந்து, சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications