கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் இங்கே தான் வரப்போகுதா? “மேப்பை எடுங்க”.. வேலையை ஆரம்பித்த உதயநிதி!
கோவை: கோவைக்கு நேற்றே வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.
கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு பாராட்டு விழா, கலைஞர் நுற்றாண்டு நிறைவு விழா, தமிழ்நாடு புதுச்சேரியில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி விழா என முப்பெரும் விழாவாக இந்த பொது கூட்டம் நடத்தப்படுகிறது.இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுக கூட்டணியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.இந்த பொதுக்கூட்ட நிகழ்விற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்துள்ளார்.
உதயநிதி செய்த முக்கியமான வேலை: கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றொரு முக்கியமான பணியையும் மேற்கொண்டுள்ளார். கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளையும் நேற்று தொடங்கியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “மக்களவைத் தேர்தல் 2024-ன் போது முதலமைச்சர் ஸ்டாலின், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்புடைய இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளை இன்று தொடங்கினோம்.
கோவை ஒண்டிப்புதூரில் விசிட்: அதன்படி, கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என இன்று நேரில் ஆய்வு செய்தோம். தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத்துறையிலும் உலகமே உற்று நோக்குகிற வகையில் மேலும் உயர்வதை உறுதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு கோவை லோக்சபா தொகுதியை திமுக நேரடியாக வென்றிருக்கிறது. இதை கொண்டாடும் வகையில் இன்று கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவின்போது கோவைக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் அதற்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்தவகையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பது பற்றிய அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது.
ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம்?: அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானம் உருவாக்க, 20 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. ஒண்டிபுதுார், பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், எல் என் டி பைபாஸ் அருகே உள்ள இடம், காந்திபுரம் மத்திய சிறை மைதானம் என நான்கு இடங்கள், மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி உதயநிதி, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள இடத்தை ஆய்வு செய்துள்ளார்.
ஒண்டிப்புதூர் சிறை திறந்தவெளி மைதானம் மொத்தம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு சிறைத் துறை சார்பில் சிறை கைதிகளை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கிரிக்கெட் மைதானம் அமைக்க 20 ஏக்கருக்கும் மேல் நிலம் தேவைப்படும் நிலையில் இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி அருகே சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications