டிஆர்பி ராஜா கிட்ட வந்ததுமே ராகுல் காந்தியை அழைத்து ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. பூரித்துப்போன ராஜா!
கோவை: அமைச்சர் டிஆர்பி ராஜா பற்றி பெருமையாகக் கூறி ராகுல் காந்திக்கு அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
கோவை மாவட்டம் சிட்டிபாளையத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி வேட்பாளர் ஈஸ்வரசாமி, கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். ராகுல் காந்தி மேடைக்கு வந்ததுமே, முதல்வர் ஸ்டாலினிடம், இனிப்புகள் அடங்கிய பையை வழங்கினார். கோவை விமான நிலையத்தில் இருந்து வரும் வழியில் சிங்காநல்லூர் பகுதியில் ஒரு இனிப்பகத்தில் காரை நிறுத்தி இறங்கி, ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கினார் ராகுல் காந்தி.
சாலை தடுப்புச் சுவரை தாண்டி குதித்து ஒரு ஸ்வீட் கடைக்குள் நுழைந்தார் ராகுல் காந்தி. யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் சார்? என்று கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்கவே, அவரிடம் "என் சகோதரர் ஸ்டாலினுக்காக" என்று பதிலளித்தார் ராகுல். தான் வாங்கி வந்த இனிப்பை பிரச்சார கூட்டத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார். முதல்வர் ஸ்டாலினும் அதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார்.
டிஆர்பி ராஜா வழங்கிய பரிசு: பிரச்சார கூட்ட மேடையில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், "பெரியார் இன்றும் என்றும்" நூலை ராகுல் காந்திக்கு பரிசாக வழங்கினார். அமைச்சரும், திமுக கோவை தொகுதி பொறுப்பாளரும், திமுக ஐடி விங் மாநில செயலாளருமான டிஆர்பி ராஜா, ராகுல் காந்திக்கு, புதிய நாடாளுமன்றக் கட்டிட வடிவிலான நினைவுப் பரிசை வழங்கினார்.

ராகுல் காந்தியை அழைத்து சொன்ன ஸ்டாலின்: டிஆர்பி ராஜா அருகில் வந்ததுமே, ராகுல் காந்தியை தொட்டு அழைத்த ஸ்டாலின், டிஆர்பி ராஜாவை நோக்கி கையை காட்டி, இவர் நம் டிஆர் பாலுவின் மகன் ராஜா. தொழில்துறை அமைச்சராக இருக்கிறார் என அறிமுகப்படுத்தியதோடு, டிஆர்பி ராஜாவை பாராட்டும் வகையில் பெருமையாக சில வார்த்தைகளையும் கூறினார். இதனால் பூரித்துப் போனார் டிஆர்பி ராஜா.
கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பங்கேற்ற மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் குறித்துப் பேசியுள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா, "தமிழ்நாடு முழுவதும் பாஜக நடத்திய கூட்டங்கள் அனைத்தையும் சேர்த்தால்கூட இந்த கூட்டம் அதை முறியடித்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications