"டொக்கு.. டொக்கு.. டொக்குன்னு.." கோவை தொண்டர்கள் சிரிப்பலைக்கு இடையே.. அமைச்சரை கலாய்த்த ஸ்டாலின்!
கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுகவை நிராகரிக்கிறோம் நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 'கலாய்த்துள்ளார்' திமுக தலைவர் ஸ்டாலின்.
மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின், பல மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இன்று கோவையில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பலூன் உடைப்பு மந்திரி என கலாய்த்தார் ஸ்டாலின்.
பலூன் பார்த்தேன்
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதை பாருங்கள்: மக்கள் கிராம சபை கூட்டத்தை ஆரம்பிக்கலாமா.. நான் ரெடி.. நீங்க ரெடியா? வரும் வழியில் பார்த்தேன். நாம் வரும் வழியில் எல்லாம் பலூன் கட்டியிருந்தார்கள். இதை பார்த்ததும் எனக்கு ராஜேந்திர பாலாஜி நினைப்பு வந்துவிட்டது. உடனே நான் தோழர்களை அழைத்து அந்த பலூன்களை அவிழ்த்துவிடுமாறு கூறினேன்.
டொக்கு, டொக்கு
ஏன்னா.. நாளைக்கு ராஜேந்திர பாலாஜி இங்கே வருவார். ஒவ்வொரு பலூனாக உடைத்து உடைத்து பார்ப்பார். நீங்கல்லாம் பார்த்தீங்களா இல்லையா, வாட்ஸ்அப்பில். மந்திரி அடிக்கல் நாட்டு விழாவோ, திறப்பு விழாவுக்கோ போறார். அங்கு கலெக்டர் உடன் இருக்கிறார். அப்போது கத்திரி கோலை எடுத்து.. டொக்கு.. டொக்கு.. டொக்குன்னு பலூனை உடைந்தார் அந்த மந்திரி. இவ்வாறு கிண்டல் செய்தார் ஸ்டாலின். அப்போது திமுக ஆண்-பெண், தொண்டர்கள் சத்தமாக சிரித்தனர். சிலர் பலூன் பாலாஜி என கோஷங்களை எழுப்பினர்.
ஓபிஎஸ் பற்றி கிண்டல்
இதையடுத்து மேலும் பேசிய ஸ்டாலின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் 40 நிமிடங்கள் ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து ஆவியோடு பேசினார். என் பதவியை பிடுங்கிட்டாங்க. ஆனால் விடமாட்டேன். உங்கள் மரணம் மர்ம மரணம், நீதி விசாரணை கேட்கப்போகிறேன் என்று சபதம் எடுத்தார். இப்போது என்னாச்சி? இவ்வாறு ஓபிஎஸ் பற்றியும் கிண்டல் செய்தார் ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு வரவேற்பு
கோவை மாவட்டத்திற்கு ஸ்டாலின் வருகை தந்ததால், அங்கு திமுகவினர் தோரணங்களுடன் தடபுடல் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.