மோடி வருகையால் ரெட் ஜோன் ஆன கோவை.. இன்று முதல் 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை
கோவை: பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 18ஆம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் 'ரோடு ஷோ' நிகழ்வில் பங்கேற்கும் மோடி லோக்சபா தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படா விட்டாலும் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. பாஜக கூட்டணி, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பல முனைப்போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற பணிகளில் மும்முறமாக இருக்கும் அதே நேரத்தில் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

நடப்பாண்டில் தமிழகத்துக்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை 5 முறை வந்துள்ளார். கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி கலந்து கொண்டு பிரதமர் பிரச்சாரம் செய்தார். இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் பிரதமர் மோடி.
கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. பிரதமர் மோடி வரும் 18ஆம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் வழக்கமாக அவர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார். ஆனால், இந்த முறை , பொதுக் கூட்டத்துக்கு பதில், ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மோடி வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ்குமார், பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ஆம் தேதி கோவை கவுண்டம்பாளையத்தில் 'ரோடு ஷோ' நிகழ்வைத் தொடங்கி வைத்து அதில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக, ஆர்.எஸ்.புரம் சென்று, அங்குள்ள தலைமை அஞ்சல் நிலையம் சந்திப்பு அருகே இந்த ரோடு ஷோ முடிவடைகிறது என்று தெரிவித்தார்.
பிரதமர் வருகையையொட்டி கோவையில் இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ரெட் ஜோனாக அறிவிப்பு: 18ஆம் தேதி 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications