ஆடு பத்திரம்.. கோவையில் ஆட்டை திருடி மட்டன் கடை நடத்திய வியாபாரிகள்
கோவை: கோவையில் வேனில் சென்று ஆடுகளைத் திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்த மட்டன் ஸ்டால் ஓனர்களை போலீஸார் கைது செய்தனர். கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கால்நடை விவசாயத்தை நம்பிதான் உள்ளனர். தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை விவசாயிகள் அதிகளவில் உள்ளனர்.
இந்நிலையில், கோவை மாநகரப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக 15க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டுப் போனதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. ஜூலை 16ம் தேதி முதல் பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, பாடசாலை வீதியில் மூன்று ஆடுகள், வடவள்ளி, காந்திநகர், நால்வர் நகரில் நான்கு ஆடுகள் காணாமல் போயுள்ளன.

குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதிகளில் இரண்டு ஆடுகள், வடவள்ளி திருமுருகன் நகரில் மூன்று ஆடுகள் மற்றும் சுந்தராபுரத்தில் மூன்று ஆடுகள் இரவு நேரங்களில் திருடு போயுள்ளன. வடவள்ளி, அண்ணா நகரில் வீட்டின்முன் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை பட்டப்பகலிலேயே அலேக்காக திருடிச் சென்றுள்ளனர். இதேபோல, பி.என்.புதுார், சென்னிமலை ஆண்டவர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆடுகள் திருடு போயுள்ளன.
சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதிகளைக் குறிவைத்து தொடர்ந்து இத்திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதையடுத்து, மாநகர போலீஸார் திருட்டுக் கும்பலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், செம்மேடு அருகே உள்ள இருட்டுப்பள்ளத்தைச் சேர்ந்த சண்முகம் 44, அவரது மனைவி சுகன்யா 39, இவர்களது மகன் வினோத்குமார் 25 மற்றும் குறிச்சி, கல்லக்குழி தெருவைச் சேர்ந்த சண்முகத்தின் உறவினர் சதீஷ்குமார், குனியமுத்தூர் சுகுணாபுரத்தைச் சேர்ந்த சாதிக் பாஷா 54, குனியமுத்தூரைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில், ஆலாந்துறையில் சண்முகம் மற்றும் அவரது மனைவிக்கு 2 மட்டன் ஸ்டால்களும், குனியமத்தூரில் சாதிக் பாஷாவுக்கு ஒரு மட்டன் ஸ்டாலும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் கோவை புறநகர்ப் பகுதிகளான வடவள்ளி, சாயிபாபா காலனி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம், போத்தனூர், குனியமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் வேன் அல்லது இருசக்கர வாகனத்தில் சென்று சாலையில் ஆடு மேய்ப்பவர்களின்றி சுற்றித் திரியும் ஆடுகளைப் பிடித்து வேன் மூலமாக திருடிச் சென்றுள்ளனர்.

பின்னர், மட்டன் ஸ்டாலுக்கு கொண்டு சென்று குறைந்த விலையில் இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளனர். மார்க்கெட்டில் ஆட்டு இறைச்சி கிலோ 800 முதல் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இவர்களது கடைகளில் 600 முதல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடமிருந்த 51 ஆடுகளை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகள் உரிமையாளர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications