கனமழை கொட்டப்போகுது.. ஹை அலர்ட்டில் வால்பாறை, டாப்ஸ்லிப்.. கோவை ஆட்சியர் பவன் குமார் சொன்ன தகவல்!
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப் பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். கனமழையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறிய அவர், பவானி ஆற்றங்கரையோரம் மக்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ அல்லது தண்ணீர் தேங்கினாலோ உடனடியாக சரி செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 8 நாட்களுக்கு முன்பாக தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றுமுதல் அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், மாவட்ட நிர்வாகம் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் பவன் குமார் பேட்டி
இதனையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பவன் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ஆட்சியர் பவன் குமார் பேசுகையில், கோவை மாவட்டத்தில் 5 முதல் 6 மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள பகுதிகளில் கனமழையின் போது தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சனை
இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க கூடுதல் பம்புகளுடன், ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். அதற்கான ஜெனரேட்டர் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் மழையின் தீவிரத்தன்மையை கணக்கில் கொண்டு தண்ணீர் தேங்கினால் உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தை பொறுத்தவரை தனி அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
முகாம்கள்
வால்பாறை பகுதியில் அதிகளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அங்குள்ள கல்லூரியில் மக்கள் தங்குவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாநகராட்சியில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ, அந்த பகுதி மக்கள் பாதுகாப்புடன் தங்கவும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளிலும் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அச்சம் தேவையில்லை
பொதுமக்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை. ஏதாவது ஒரு பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் இருந்தாலோ, தண்ணீர் தேங்கினாலோ உடனடியாக உதவி எண்களில் அழைத்து புகார் அளிக்கலாம். பின் துறை சார்ந்த அதிகாரிகள் உதவிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். பொள்ளாச்சி - வால்பாறை செல்லும் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டால் கூட, நெடுஞ்சாலை துறை சார்பாக ஜேசிபி இயந்திரங்களுடன் 3 குழு தயார் நிலையில் உள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக்குழு
பொதுமக்கள் தண்ணீர் தேங்கும் பகுதிகள், பவானி ஆற்றுப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் வாய்க்கால்களை தூர் வாரும் பணிகள் 75 சதவிகிதம் வரை முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். வால்பாறை, டாப்ஸ்லிப் பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக கோவையில் மரம் வெட்டும் கருவிகள், 40க்கும் மேற்பட்ட முகாம்கள், 43 ஜெனரேட்டர்கள், 100 ஜேசிபி இயந்திரங்கள், 50 தண்ணீர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications