கார் சிலிண்டர் வெடிப்பு- கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள்-டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோருடன் ஆலோசனை!
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. (NIA) அதிகாரிகள் கோவை வருகை தந்துள்ளனர். தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகளுடன் என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
கோவையில் கடந்த 23-ந் தேதி கார் ஒன்றில் இருந்த சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கோவை போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர்.

கார் சிலிண்டர் வெடிப்பு
இந்த விசாரணையில் கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என அடையாளம் கண்டனர். மேலும் காரில் ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் சிதறி கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இச்சோதனையில் முபின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களும் பறிமுதல் செயப்பட்டன. தமிழக டிஜிபி சைலேந்திரபாபும் கோவை விரைந்து ஆய்வு நடத்தினார்.

6 பேர் கைது
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். நெல்லையை சேர்ந்த மற்றொரு நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

என்.ஐ.ஏ. விசாரணை
இந்நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனடிப்படையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை
இதனைத் தொடர்ந்து கோவை வருகை தந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தற்போதுவரை மொத்தம் 6 பேர் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 பேர் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.












Click it and Unblock the Notifications