கோவை கார் வெடிப்பு சம்பவம்.. 14வது குற்றவாளி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ!
கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில், 14வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹா நசீர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என்.ஐ.ஏ.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா முபின் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜமேஷா முபீன் வீட்டில் நடந்த சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு அங்கிருந்த ஆவணங்களையும் கைப்பற்றி, தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் போத்தனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரது மகனான தாஹா நசீரை 14வது நபராக என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்திருந்தனர். கோவை மாவட்டம் சௌரிபாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் செண்டரில் பணியாற்றி வரும் நசீரும் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனும் நண்பர்கள் என கூறப்படும் சூழலில் தாஹா நசீர் கைது செய்யப்பட்டார்.
தாஹா நசீரை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 14 வது நபராக தாஹா நசீர், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தாஹா நசீரை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கில், 14வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹா நசீர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என்.ஐ.ஏ.












Click it and Unblock the Notifications