திமுக கவுன்சிலர் வீட்டில் என்ஐஏ ரெய்டு.. துருவி துருவி கேட்ட அதிகாரிகள்! தடதடத்த கோவை: என்ன நடந்தது?
கோவை: தமிழ்நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை இன்று 30 இடங்களில் திடீர் சோதனை நடத்தியது. கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. என்.ஐ.ஏ ரெய்டுக்கு பிறகு திமுக பெண் கவுன்சிலரின் கணவர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், கோவை அரபிக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பாக பயிற்சி அளித்ததாகவும் சந்தேகப்படும் நபர்கள், ஜமேஷா முபின் உடன் படித்தவர்கள் வீடுகளில், கோவை, சென்னை, தென்காசி ஆகிய இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கோவை ஜி.எம்.நகரில் அபுதாஹீர் என்பவரின் வீடு, குனியமுத்தூரில் உள்ள சுஹைல் என்பவர் வீடு, கரும்புக்கடை பகுதியில் மன்சூர் என்பவர் வீடு, திமுக இளைஞரணி நிர்வாகியான தமிம் அன்சாரி என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரிய பெருமாள் கோவில் வீதியில் வசிக்கும் கோவை மாநகராட்சி 82 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் முபசீரா வீட்டிலும், இன்று விடியற்காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கவுன்சிலர் முபசீரா குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணையும் நடத்தினர். அங்கு நடைபெற்ற சோதனை முடிந்து வெளியேறிய அதிகாரிகள் கைகளில் பையுடன் சென்றனர்.
திமுக மாநகராட்சி கவுன்சிலர் முபசீரா, கோயம்புத்தூர் மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவராகவும் உள்ளார். முபசீராவின் கணவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை முடிந்து அங்கிருந்து கிளம்பிய நிலையில் முபசீராவின் கணவர் ஆரிஃப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சனோஃபர் அலி என்பவரின் காய்கறி கடை அருகே என் கடை உள்ளது. அதன் அடிப்படையில் என்னிடமும் விசாரணை செய்தனர். அரபிக் கல்லூரிக்கு சென்றீர்களா என விசாரித்தனர். நான் அங்கு சென்றது இல்லை என கூறினேன். ஒன்றரை ஆண்டுகளாகத் தான் சனோஃபர் அலியை தெரியும். பக்கத்து கடை என்ற அடிப்படையில் என்னிடம் விசாரித்தனர்.
மேலும், ஒரு சில இடங்களைக் கூறி அங்கு சென்று வந்துள்ளீர்களா என கேட்டனர். 5 அதிகாரிகள் வந்து என்னிடம் விசாரித்தனர். என்ன என்ன வியாபாரம் செய்தனர் என கேட்டனர். சனோஃபர் அலியை எப்படி தெரியும் என மட்டும் கேட்டனர். முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தேன். எனக்கும் அரபிக் கல்லூரிக்கும் சம்பந்தம் இல்லை. என் மனைவியிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. என் வீட்டில் சோதனை நடத்திய பிறகு எதுவும் இல்லை எனக் கூறி கிளம்பிவிட்டனர்" என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications