தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். சதி... கோவை என்.ஐ.ஏ சோதனைகளின் பரபர பின்னணி!
Recommended Video
கோவை: தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும் இதற்கான மூளையாக செயல்பட்டது கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் என்பதால் அங்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனைகளின் போது இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தின் சஹ்ரானுடன் சிலருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தவ்ஹீத் ஜமா அத் இயக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. மேலும் இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்த சதித் திட்டம் தீடப்பட்டிருப்பதையும் என்.ஐ.ஏ. கண்டுபிடித்தது.

ஈஸ்டர் நாள் தற்கொலைப்படை தாக்குதல்கள்
இத்தகவல்களை இலங்கைக்கு தெரிவித்த போதும் அந்நாடு இதை அலட்சியப்படுத்தியது. இந்நிலையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் இலங்கையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி 350க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது.

விசாரணை விவரங்கள் பகிர்வு
இதனைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு இலங்கை சென்று விசாரணை நடத்தியது. மேலும் கோவையில் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களையும் இலங்கையுடன் மீண்டும் பகிர்ந்து கொண்டது. இலங்கை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணைகளையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

பயங்கரவாதி அசாருதீன்
பின்னர் நாடு திரும்பிய என்.ஐ.ஏ. குழு, கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர்தான் இலங்கை தற்கொலைப்படை தீவிரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை உறுதி செய்து மே 30-ந் தேதியன்று வழக்குப் பதிவு செய்தனர்., தமிழகம், கேரளா இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகளை அசாருதீன் மேற்கொண்டிருந்தாராம்.

கோவையில் அதிரடி சோதனை
அத்துடன் தென்னிந்திய முக்கிய நகரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தாக்குதல் நடத்தவும் அசாரூதீன் சதித் திட்டம் தீட்டியிருந்தாராம். இதனையடுத்து கோவையில் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் அசாருதீனுடன் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications