மீண்டும் 1998 கோவை தாக்குதலுக்கு சிறையில் சதி? அன்று டிபன் பாக்ஸ்.. இன்று சிலிண்டர் வெடிகுண்டு!
கோவை: 1998-ம் ஆண்டு 60 உயிர்களை பலி கொண்ட கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் அச்ச ரேகைகள் மீண்டும் கோவையில் உருவெடுத்து நிற்கின்றன. அன்று டிபன் பாக்ஸ் குண்டுகள் மூலம் கோவையை உருக்குலைத்த பயங்கரவாதிகள் இன்று அதைவிட மோசமான நாசத்தை ஏற்படுத்த சிலிண்டர் வெடிகுண்டை உருவாக்கியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான சதித் திட்டம் சிறைகளில்தான் உருவானதா என்பதை பாதுகாப்பு தரப்பினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே அதிகாலையில் கார் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்தது. இதுதான் முதலில் வெளியான தகவல்.. அடுத்ததாக தீ பிடித்த காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது.. வேகத்தடையில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்தது என்பது பின்னர் வெளியான தகவல்... ஆனால் காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகளும், பால்ரஸ் குண்டுகளும் கிடைத்தன; சிலிண்டர் வெடிப்பில் செத்துப் போன முபினின் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கின என்கிற தகவல்கள் தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தன.

என்.ஐ.ஏ.விசாரணை ஏன்?
பின்னர்தான் முபின் வீட்டு சிசிடிவி காட்சிகளும் அந்த பயங்கரவாதியின் கூட்டாளிகள் 6 பேர் சிக்கியிருக்கும் தகவல்களும் வந்தன. இப்போது இந்த வழக்கை தமிழக அரசு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கிறது. அதாவது பயங்கரவாதம் தொடர்புடையது; வெடிபொருட்கள் தொடர்புடையது என்பதால் காவல்துறையினர் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் அல்லது ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. பொதுவாக ஊபா அல்லது உபா சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கக் கூடிய அதிகாரம் படைத்தது தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. அதனால்தான் இயல்பாகவே இந்த வழக்கை என்.ஐ.ஏதான் விசாரித்தாக வேண்டும். இதில் சீமான் உள்ளிட்டோர் குற்றம்சாட்டுவதை போல தமிழக அரசு மாநில தன்னாட்சி கொள்கையில் சமரசம் செய்து கொண்டதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

1998 கோவை தாக்குதல்
இதுவரையிலான கோவை தகவல்கள் அனைத்துமே 1998-ம் ஆண்டு 60 பேரை கோவையில் பலி கொண்ட 'ஆபரேஷன் அல்லாஹூ அக்பர்' பயங்கரவாத தாக்குதலை மீண்டும் மீண்டும் நினைவூட்டி அச்சமூட்டுகிறது. 1998-ல் தமிழகத்தில் அல் உம்மா என்ற இஸ்லாமிய அமைப்பு மிக தீவிரமாக செயல்பட்டு வந்தது. பாபர் மசூதி இடிப்புக்கு பிந்தைய இஸ்லாமியர்களின் கொதிநிலையை அல் உம்மா இயக்கம் அடைகாத்து அறுவடை செய்ய காத்திருந்தது. பாபர் மசூதி இடிப்புக்குப் பழிவாங்கும் வகையில் மும்பையில் 1993-ம் ஆண்டு மிக கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதே பாணியிலான தாக்குதலைத்தான் கோவையில் அல் உம்மா இயக்கம் நடத்தியது.

அல் உம்மா பாட்ஷா
அல் உம்மா இயக்கத்தின் தலைவராக இருந்த எஸ்.ஏ.பாஷாதான் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக இருந்தார். கோவையின் முக்கிய இடங்களில் டிபன் பாக்ஸ்களில் வெடிகுண்டுகளை நிரப்பி அவற்றை வெடிக்க செய்தது அல் உம்மா. அப்போது டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் வெடிக்காமல் போனால் தற்கொலை படை தாக்குதல் நடத்த 7 மனித வெடிகுண்டுகளையும் அல் உம்மா உருவாக்கி வைத்திருந்தது
என்பது பாதுகாப்பு துறையின் குற்றச்சாட்டு.

ஆபரேஷன் அல்லாஹூ அக்பரும் டார்கெட் அத்வானியும்
1998-ம் ஆண்டு கோவையில் நிகழ்த்தப்பட்ட 'ஆபரேஷன் அல்லாஹூ அக்பர்' பயங்கரவாத தாக்குதலின் பிரதான இலக்கு பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிதான். அப்போது அத்வானியின் விமானம் தாமதமானதால் அவர் உயிர் தப்பினார். அப்பாவிகள் 60 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 1998 கோவை சம்பவத்துக்குப் பின்னர் அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் நிறுவனத் தலைவர் பாட்ஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இன்னமும் பாட்ஷா உள்ளிட்ட அல் உம்மா பயங்கரவாதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

சிலிண்டர் வெடிகுண்டு சதியில் பாட்ஷா தம்பி மகன்
தற்போதும் 1998-ம் ஆண்டு பாணியில்தான் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளுக்கு பதில் சிலிண்டர் வெடிகுண்டை தயாரித்திருக்கின்றனர் பயங்கரவாதிகள். 1998-ம் ஆண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாட்ஷாவின் குடும்பம்தான் தற்போதைய பயங்கரவாத சதியிலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்து செத்துப் போன முபின் கூட்டாளியாக கைது செய்யப்பட்டுள்ள முகமது தல்கா, பாட்ஷாவின் தம்பி நவாஸின் மகன் என்பது எப்படி யதேச்சையானதாக இருக்க முடியும் என்பதும் பாதுகாப்பு தரப்பினரின் கேள்வி.

சிறையில் உருவானதா சதி?
இப்போது என்.ஐ.ஏ.வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது கோவை சதி வழக்கு. இந்த ஆபரேஷனுக்கு பயங்கரவாதிகள் என்ன பெயர் வைத்தார்கள்? செத்துப் போன ஜமேஷா அல்லது ஜமேசா முபீன் உள்ளிட்ட யார் எல்லாம் தற்கொலைப் படையினராக அல்லது மனித வெடிகுண்டாக உருவாக்கப்பட்டிருந்தனர்? இலங்கையின் ஈஸ்டர் தாக்குதலுக்கும் இந்த சதிகாரர்களுக்குமான தொடர்பு? 1998 கோவை பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடைய சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு இப்போதைய சதியில் என்ன பங்கு? சிலிண்டர் வெடிகுண்டு சதி என்பதே சிறையில்தான் உருவானதா? என்பவை தொடர்பான மர்ம முடிச்சுகள் என்.ஐ.ஏ.விசாரணையில் வெளியாகுமா? என்பது கோவை பொதுமக்களின் கேள்வி.












Click it and Unblock the Notifications