கொஞ்சம் விட்ருந்தா ஓபிஸ்ஸை தாக்கியிருப்பாங்க.. அந்த சம்பவத்தால் அனுதாப அலையாம்.. புகழேந்தி சொல்றாரு!
கோவை : பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் காரை பஞ்சராக்கினர், பேப்பர் மற்றும் தண்ணீர் பாட்டிலால் தாக்கினர், பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம் நடத்தி இருக்கின்றனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
போலீஸ் ஏமாந்திருந்தால், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு இருப்பார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவில் நடந்த விஷயத்தால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுதாப அலை உருவாகியிருக்கிறது என்றும் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரான புகழேந்தி கூறியுள்ளார்.

பொதுக்குழுவில்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு கூச்சல் குழப்பங்கள் நிகழ்ந்த நிலையில், முக்கிய நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், வளர்மதி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், வேலுமணி, போன்றோர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்த்தனர். ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து கிளம்பியபோது அவரை சூழ்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் ஓபிஎஸ் மீது தீர்மான நகல்களையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசினர். மேலும், ஓபிஎஸ்ஸின் வாகனத்தை சிலர் பஞ்சர் ஆக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அக்கிரமம்
இந்நிலையில், இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் செய்தி தொடர்பாளரும் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான புகழேந்தி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "அனைத்தையும் விட்டுக்கொடுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒருநாள் செக் வைப்பார்கள் என ஓராண்டுக்கு முன்பே நான் கூறினேன். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் காரை பஞ்சராக்கினர். பேப்பர் மற்றும் தண்ணீர் பாட்டிலால் ஓபிஎஸ்ஸை தாக்கினர். பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம் நடத்தி இருக்கின்றனர்." எனக் குற்றம்சாட்டினார்.

ஏன் தாக்குதல்?
மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான 11 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர வைத்தற்காக அவர் மீது தாக்குதல் நடத்தினார்களா? விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி என அறிவித்தாரே அதற்காக அடியா? என புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

போலீஸ் ஏமாந்திருந்தால்
மேலும் பேசிய அவர், "ஓபிஎஸ் தரப்பு மீது தாக்குதல் நடத்த எடப்பாடி ஆதரவாளர்கள் திட்டமிட்டனர். நேற்று காவல்துறை ஏமாந்து இருந்தால் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் தாக்கப்பட்டு இருப்பார்கள். தமிழக முதல்வர் மற்றும் போலீசார் கவனமாக இருந்ததால் தப்பித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது.

காறித் துப்புறாங்க
எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியை இன்று மக்கள் காறித் துப்புகிறார்கள். எல்லோருடைய பதவியும் பறிபோக சி.வி.சண்முகம்தான் காரணமாக இருக்கிறார். பொன்னையன், ஓ.எஸ்.மணியன் போன்ற சீனியர்கள் பேச வேண்டும். ஆனால், அவர்கள் சி.வி.சண்முகம் பின்னால் நிற்கின்றனர். நீதிமன்றத்தை அவமானப்படுத்தி இருக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கொடுத்த ஒப்புதல் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கொடுத்த தீர்ப்பை தூக்கி எறிந்துள்ளனர். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூடாது. அதற்கு வாய்ப்பில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications