நினைத்து பார்க்க முடியாத கட்டணம்.. ஆம்னி பேருந்துகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை
கோவை: பொங்கல் பண்டிகை இன்னும் 5 நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. 14ம் தேதி போகி பண்டிகை, 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் ஊருக்கு போக ஆயத்தமாகி வருகிறார். ஆனால் ஆம்னி பேருந்துகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. வழக்கமாக 600 ரூபாய் முதல் 1200 ரூபாய் என்கிற அளவில் இருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இப்போது 2000, 3000 என்கிற அளவில் இருக்கிறது.

இதனால் பயணிகள் பலரும் ஊருக்கு எப்படி போவது என்று தவித்து வருகிறார்கள். ஊருக்கு போய் திரும்ப நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 16000 ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
கோவையை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், மிகப்பெரிய தொழில் நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுவாக பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனிடையே ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க, கோவை மண்டல போக்குவரத்துத் துறை இணை ஆணையாளர் சிவகுமாரன் ஆலோசனையின்பேரில் ஆம்னி பஸ்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சத்யகுமார் (மத்தியம்), பாலமுருகன் (தெற்கு), சிவகுருநாதன் (வடக்கு), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், விஸ்வநாதன், பி.வேலுமணி, சண்முக வேலு, செல்வதீபா, தனசேகரன், சண்முகசுந்தரம், எம்.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கோவை மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனைகளை தெரிவித்தனர். இதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது, பயணிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில ஆம்னி பஸ்களில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட 2 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்திருக்கிறது.
கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும். மேலும் கூடுதல் கட்டணம் தொடர்பாக பயணிகள் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். அதுபோன்று ஆம்னி பேருந்துகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்." இவ்வாறு கூறினார்கள்.












Click it and Unblock the Notifications