கோவை 1997 கலவர நினைவு நாள்.. முக்கிய இடங்களில் குவிக்கப்பட்ட போலீசார்! தீவிர வாகன சோதனை!
கோவை : கோவையில் கலவரம் நடைபெற்ற நாளையொட்டி கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 1997ஆம் ஆண்டு கோவையில் காவலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 18 இஸ்லாமியர்கள் பலியாகினர். நவம்பர் 29ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் நினைவு நாளையொட்டி இன்று கோவையில் தீவிர பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சமீபத்தில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தால் கோவை பதற்றமிகு பகுதியாக கருதப்படும் நிலையில், வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதியை முன்னிட்டு முக்கிய இடங்களில் போலீசாரின் தீவிர கண்காணிப்பு பணிகள் தொடரும் எனக் கூறப்படுகிறது.
மங்களூர் ஆட்டோ குண்டுவெடிப்பு: பொறுப்பேற்ற இஸ்லாமிக் கவுன்சில்- கோவை முபினுக்கும் தொடர்பா?
கோவை கலவரம்
கோவை உக்கடத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. 18 இஸ்லாமியர்கள் இந்தக் கலவரத்தில் உயிரிழந்தனர். கோவை கலவர நினைவு நாளையொட்டி, கோவையில் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கோவை நகரில் 1476 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை சம்பவம்
கோவையில் கடந்த மாதம் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோவையில் எந்த வித சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கும் இடம் தராத வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நவம்பர் 29
இந்தநிலையில் கோவையில் கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி காவலர் செல்வராஜ் அல் உம்மா தீவிரவாத அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 18 இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். காவலர் செல்வராஜ் மற்றும் 18 இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்ட தினத்தையொட்டி எந்த வித அசம்பாதவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் சோதனை
கோவை நகரில் 1476 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உக்கடம், டவுன் ஹால், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், கோவையின் முக்கிய கோவில்கள், மசூதிகள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உக்கடம், சுந்தராபுரம், போத்தனூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
டிசம்பர் 6
மோப்ப நாய் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகத்திற்குரிய வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதே போல பாபர் மசூதி இடிப்பு 13வது நினைவு தினமான டிசம்பர் 6ஆம் தேதியை முன்னிட்டும் கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.