பாஜக பிரமுகர் வீட்டில் ஒரு கோடி ரூபாய், 9 சவரன் நகை கொள்ளை.. மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு!
கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையும் அடுத்துள்ள அன்னூர் சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார்.. பாஜக பிரமுகரான இவர், புதிதாக இடம் வாங்கத் திட்டமிட்டிருந்தார். இதற்காகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக வீட்டில் எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார்.

நிலம் வாங்க வைத்திருந்த பணம்: இதற்கிடையே நேற்று (மே 18) விஜயகுமார் வீட்டைப் பூட்டிவிட்டு அன்னூரில் இருக்கும் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். புதிய இடம் வாங்குவது தொடர்பான கோப்புகளைத் தயார் செய்ய அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ஆவண நடைமுறைகளை அவர் முடித்துள்ளார்.
இதையடுத்து பணத்தை எடுக்க அவர் சொக்கம்பாளையத்தில் உள்ள வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். உள்ளே பீரோ திறக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், அங்கு இருந்த பொருட்களும் சிதறி கிடந்துள்ளன.

கொள்ளை: இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை பார்த்து இருக்கிறார். உள்ளே இருந்த ஒரு கோடி ரூபாய் ரொக்கத்தை காணவில்லை. மேலும், வீட்டில் இருந்த 9 சவரன் நகையையும் காணவில்லை. அப்போது தான் ரொக்கத்தையும் நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இது கொள்ளை சம்பவம் குறித்து விஜயகுமார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகார்: உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர். மேலும், வேறு தடயங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

நிலம் வாங்க வீட்டில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 கோடி ரொக்கம் மற்றும் 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications