லிங்கை தொட்டா போச்சு.. இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் மோசடி.. ராஜஸ்தான் கும்பலை தட்டி தூக்கிய கோவை போலீஸ்
கோவை: இன்ஸ்டாகிராம் மூலமாக ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சேர்ந்த 4 பேரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் கூறப்பட்ட செயலியின் மூலம் பங்குச் சந்தையில் 9 லட்சம் முதலீடு செய்த நிலையில் 13 லட்சமாக மாறியுள்ளது.
கோவையில் வசித்து வருபவர் ராமசாமி. இவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள செயலியை மார்ச் மாதம் 14 ஆம் தேதி பயன்படுத்தியுள்ளார். அப்போது, பங்குச் சந்தை முதலீடு குறித்த ஒரு பதிவு காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பதிவில் உள்ள லிங்கை ராமசாமி தொட்டபோது, சூப்பர் டிரிங்க்ஸ் ஸ்டாக் டிரேடிங் என்ற ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இவரது எண்ணும் சேர்ந்துள்ளது.

அதன் பின்னர் அந்த வாட்ஸ்அப் குரூப்பில் வந்த லிங்க் மூலமாக பெயின் (Bain) என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமசாமி பெயின் என்ற செயலியை தனது செல்போனில் இன்ஸ்டால் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய செல்போன் எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, 9 லட்சத்து 8 ஆயிரத்து 100 ரூபாயை ஸ்டாக்கில் முதலீடு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த செயலியில் 32 லட்சம் ரூபாய் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. பணம் வந்ததும் மகிழ்ச்சியடைந்த ராமசாமி உடனடியாக அந்தப் பணத்தை எடுப்பதற்காக ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார். அப்போது, கூடுதலாகப் பணம் கட்ட வேண்டும் என்று அவருக்கு மெசேஜ் வந்துள்ளது.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட ராமசாமி இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் தாமரைக் கண்ணன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு தனிப்படையினர் சென்றனர்.
இதுதொடர்பாக, ஜோத்பூர், மக்ரபுஞ்சல் பகுதியைச் சேர்ந்த சத்ய நாராயண் (30), சி சாலை, சரண் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷன் சௌத்ரி (20), பி சாலை, சரண் நகர் பகுதியைச் சேர்ந்த சுனில் சரண் (23), பனார் சாலை பகுதியைச் சேர்ந்த சந்தீப் குமார் (26) ஆகியோரை உள்ளுர் காவல் துறையினரின் உதவியுடன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் ஆகஸ்ட் 23 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர், ஜோத்பூரில் உள்ள கூடுதல் நீதித்துறை முதன்மை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து நான்கு மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள், நான்கு வங்கிக் கணக்கு புத்தகங்கள் உட்பட மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பல பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், குற்றவாளி சத்யநாராணயன் என்பவருக்கு பல்வேறு வங்கிகளில் 8 வங்கிக் கணக்குகளும், சந்தீப் என்பவருக்கு பல்வேறு வங்கிகளில் 3 வங்கிக் கணக்குகளும் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அந்த வங்கிக் கணக்குகளின் மூலமாக புகார்தாரரின் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, ரூ. 3,59,650 கைப்பற்றப்பட்டு நீதித்துறை நடுவரின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு, விரைவில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட உள்ளது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 3 கோடிகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications