இளைஞர்களுக்கு வேலை இருக்கு.. சிதம்பரமும் ராகுலும் தான் வேலையில்லாமல் இருக்காங்க.. அண்ணாமலை கொதிப்பு
கோவை: நாட்டில் 83 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை என்று காங்கிரசின் ப சிதம்பரம் கூறிய நிலையில், ப சிதம்பரமும், ராகுல் காந்தியும் தான் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சோமனூரில் விசைத்தறி நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசைத்தறிகளை எல்லாம் உடைத்து கிலோவுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். குறிப்பாக மின்சார நிலை கட்டணம் உயர்வு. எனவே நம்முடைய நோக்கம் எல்லாம் இதனை எப்படி சரி செய்வது என்று தான். அதனால், சோமனூரில் ஜவுளி பூங்காவை மத்திய அரசு அமைக்கும்.

சோமனூர் ரயில் நிலையமும் அம்ரித் பாரத் திட்டத்தில் இணைத்து ரயில் நிலையத்தையும் விரிவாக்கம் செய்ய முயற்சி செய்யப்படும். மக்களுக்கு இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாம இருப்பதாக ப சிதம்பரம் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அண்ணாமலை கூறியதாவது:- ப சிதம்பரம் தான் வேலை இல்லாமல் இருக்கிறார். இளைஞர்களுக்கு எல்லாம் வேலை இருக்கிறது. ப சிதம்பரமும் அவரது குடும்பத்தினரும் தான் வேலையின்றி இருக்கிறார்கள்.
இதனால் தான் என்ன செய்வது என்று தெரியாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ப சிதம்பரத்தின் தலைவர் ராகுல் காந்தியும் வேலை இல்லாமல் இருக்கிறார். ப சிதம்பரமும், ராகுல் காந்தியும் வேலை இல்லாமல் இருப்பதால் இளைஞர்களும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லலாமா?.. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
அதேவேளையில், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பாஜகவும் தீவிரம் காட்டி வருகிறது. 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் பாஜக வியூகம் வகுத்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி அண்மையில் பேசும் போது, இந்தியாவில் படித்த இளைஞர்கள் 62 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இன்றி இருப்பதாக கூறினார்.
ராகுல் காந்தி இது தொடர்பாக கூறுகையில், இந்தியாவின் வேலைவாய்ப்பு அறிக்கை 2024 மோடி அரசின் தோல்வியை தோலுரித்து காட்டுவதாகவும் அந்த அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள 84 சதவிகித இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அல்லது குறைந்த ஊதியத்தில் மோசமான வேலையை செய்கிறார்கள் என்று சொல்கிறது" என்று சாடியிருந்தார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரமும் கடுமையாக விமர்சித்து இருந்தார். சிதம்பரம் கூறுகையில், உலகிலேயே மிகப்பெரிய மக்கள் தொகை இருக்கும் இடத்தில், 4 முதல் 5 சதவிகிதம் வளர்ச்சி இருந்தாலே முன்னேற்றம் என்பது தானாகவே நடக்கும். அதுதான் பாஜக ஆட்சிக் காலத்திலும் நடந்துள்ளது.
பாஜக ஆட்சியில் வேலையின்மை எந்தக் காலத்திலும் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. 35 சதவீதமாக இருந்த வேலையின்மை, 65 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நாட்டில் 83 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை" என்று பேசியிருந்தார். ராகுல் காந்தி மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications