வயது 109.. பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் பாட்டி காலமானார்.. மோடிக்கே பிடித்தவராச்சே
கோவை: இயற்கை விவசாயம் செய்து மற்றவர்களை ஊக்கப்படுத்தி வந்ததற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி தனது 109வது வயதில் இன்று காலமானார். பிரதமர் மோடிக்கு பிடித்த பாட்டியாக அறியப்படும் இவர் யார்? பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கு வயது 109. இவர் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தார். மேலும் பலருக்கும் இயற்கை விவசாயத்தில் முன்னுதாரணமாக இருந்தார்.

பாப்பம்மாள் பாட்டியை பாராட்டி மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதன்மூலம் அவர் நம் நாடு முழுவதும் பிரபலமானார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் 17 ம் தேதி நடந்த திமுக முப்பெரும் விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு ‛பெரியார் விருது' வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாப்பம்மாள் பாட்டி இன்று காலமானார். இதனால் பாப்பம்மாள் பாட்டியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 109 வயதில் காலமான பாப்பம்மாள் பாட்டி பிரதமர் மோடியின் மனம் கவர்ந்தவராக இருந்து வந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்தபோது பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சர்வதேச சிறுதானிய மாநாட்டில் பாப்பம்மாள் பாட்டி கலந்துக்கொண்டார். அப்போது பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசீர்வாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications