பழனி முருகன் மாநாடு.. ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது.. தமிழிசை செளந்தரராஜன்
கோவை: சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மீகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 42 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறோம். முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மீக பூமிதான். சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மீகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.

ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்பதன் ஒரு யுக்திதான் இது. இதேபோல, எங்காவது சிறுபான்மை மாநாடு நடந்தால் அதை முதலமைச்சர் துவக்கி வைக்காமல் இருப்பாரா?. முதல்வர் போகாவிட்டாலும் உதயநிதியாவது துவக்கிவைப்பார். சேகர்பாபு ஆன்மீகத்துக்காகவே பிறந்தவர். ஆன்மீக உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் அரசாங்கமே ஆன்மீக மாநாடு நடத்துவது தமிழகம் ஆன்மீகத்தின் பக்கம்தான் என்பதை காட்டுகின்றது. தமிழகத்தில் பெரியார் கொள்கையைச் சேர்ந்தவர்கள் பெரியாரின் கொள்கையையும் வழிபட்டு, அண்ணாவின் கொள்கையை பின்பற்றியவர்கள். ஆண்டாளையும் பின்பற்ற வேண்டியிருக்கும். உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் முருக பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து சமய அறநிலையத்தைப் பொறுத்தவரை இன்னும் பல நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னும் பல வேலைகளை கோயில்களில் செய்ய வேண்டும். பல கோவில்கள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. தவெக கொடியிலே இருப்பது வாகை பூவா, தூங்கு மூஞ்சி மரமா என்று தெரியவில்லை.
பகுஜன் சமாஜ் கட்சி சகோதரர் யானை அவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லி இருக்கிறார். சட்ட ரீதியாக ஒரு சில கருத்துகளை சொல்கிறார்.
விஜய் கட்சியைச் சேர்ந்தவர்கள் சட்ட ரீதியாக அதில் தவறு இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும். விமர்சனங்கள் இல்லாமல் ஒரு கட்சி இருக்காது. விமர்சையாக ஆரம்பித்தாரோ என்னவோ, விமர்சனங்களோடு ஆரம்பித்திருக்கிறார். இன்னொரு கட்சியை துன்புறுத்தாமல் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ செய்து கொள்ளட்டும்.
பிரதமர் உக்கிரைன் சென்று இருப்பது உலகத் தலைவர்களுக்கு முன்னுதாரணம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன் என சொல்லி இருக்கின்றார். உலக அமைதிக்காக பல நாடுகளில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் நமது பாரத பிரதமருக்கு தான் கொடுக்க வேண்டும்.
பா.ஜ.க., திமுக இடையே எப்போதும் பிணக்கமான சூழ்நிலைதான். கொள்கை ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் பிணக்கமான கொள்கைதான். நாகரிகமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து இருக்கிறது. மாற்று அரசியலை பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்கிறது. திமுகவுடன் கூட்டணி என்பதெல்லாம் நாணய விழாவோடு போய்விட்டது.
அதிமுகவால் பாஜக வெற்றி பெற்றதா? பாஜகவால் அதிமுக வெற்றி பெற்றதா? என்ற கேள்விக்கு இது ஒரு பெரிய விவாதம் என பதில் அளித்தார். ஆனால்,
கூட்டணி என வரும்போது எங்களது உதவி இல்லை என்று சொல்ல முடியாது. எங்களால் மட்டும் தான் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என அவர்கள் சொல்ல முடியாது. இந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய வாக்கு வங்கியை செயலால் நிரூபித்து இருக்கிறோம். அந்த எண்ணிக்கையே பதில் சொல்லும்.
முருகனை எதிர்த்தவர்கள், ராமனுக்கு செருப்பு மாலை போட்டவர்கள், ராமன்தான் எங்களுக்கு வழிகாட்டி என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். முருகனை எதிர்த்தவர்கள், முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டியிருக்கிறது. ஒன்றியம் என்று சொன்னவர்கள் மத்திய அரசு என்று சொல்ல வேண்டி இருக்கிறது.
யாரெல்லாம் பாஜக, இந்து மத கொள்கைகளை எதிர்த்தார்களோ அவர்கள் எங்களை நோக்கி வர வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது என்பதுதான் முதல்வரின் மத்திய என்ற வார்த்தை காட்டுகிறது.
முருகனை தங்களது ஆளுமைக்குள் திடீரென ஏன் கொண்டு வர வேண்டும். நாங்கள் தான் முதலில் வேலை எடுத்தோம். முருகனை மிக கீழ்தரமாக சிலர் பேசினா். அப்பொழுது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. முருகனை நிந்தனை செய்தவர்களை, மற்றவர்களது ஓட்டை பிடிக்க முடியாதோ என்ற எண்ணத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தீர்கள்.
இன்று முருகனை, ஆன்மீகத்தை கையில் எடுக்கவில்லை என்றால் 2026 மிகப்பெரிய கேள்விக்குறியாக விடும் என்பதற்காக இதை கையில் எடுத்து இருக்கின்றனர் என்பது எனது கருத்து. பல்கலைக்கழகங்களில் கருப்பு உடை அணியக் கூடாது என சொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் நிலைகள் என்னவெல்லாம் இருக்கிறதோ அது மாறுகின்றது. ஆங்கிலேயர்களின் அடையாளம் மாற்றி, காதி துணியில் பட்டமளிப்பு விழா நடத்துகிறோம். தெலுங்கானாவில் பல்லாண்டுகளாக இருக்கிறது.
ஆங்கிலேய நாகரீத்தில் இருந்து நம் நாகரிகத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை இது. பள்ளிக் கல்வித் துறை ஏதாவது ஒரு பிரச்னை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது. போலியாக ஒருவர் NCC கேம்ப் நடத்துகிறார். பாலியல் தொல்லை கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தி இருக்கின்றார். பள்ளிக் கல்வித் துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எதையெல்லாமோ இலவசமாக கொடுத்துவிட்டு பாட புத்தகத்தில் விலையை உயர்த்தி இருக்கிறது. இது குழந்தைகளின் கல்வியில் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. பாலியல் சீண்டல் விவகாரங்களில் மிக கவனமாக செயல்பட வேண்டும். கோவை மருத்துவ கல்லூரியில் கூட மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்
தமிழக அரசு எந்த குற்றம் சாட்டப்பட்டாலும் அதில் சில பேர் பலியாகி விடுகிறார்கள். எலி மருந்து சாப்பிடுகிறார்கள், விபத்தில் சிக்குகின்றனர். இது தொடர்பான உண்மை விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். பெண்ணியவாதிகளால் அடிப்படை கலாசாரத்தை தொலைத்து வைத்திருக்கிறார்கள். இப்போதுதான் பழைய கலாசாரத்திற்கு திரும்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications