டயாலிசிஸ் செய்தால் இறந்துடுவீங்க.. அரசு மருத்துவமனை செவிலியர் சொன்னதை கேட்டு நோயாளி மாரடைப்பால் பலி
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியிடம் டயாலிசிஸ் செய்தால் இறந்துவிடுவீர்கள் என செவிலியர் ஒருவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் முருகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் அலி (57). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சவுரமா. இவர்களுக்கு இரு மகள்களும் மகனும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
அன்வர் அலிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் முழுவதும் அரிப்பும் உடல் சோர்வும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக கூறினர்.

சிறுநீரக கோளாறு
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் 9-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தினந்தோறும் டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து அவரை சிறுநீரக சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

வீட்டுக்கு
அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர், அன்வர் அலியிடம் டயாலிசிஸ் செய்தால் 90 சதவீதம் இறப்பதற்கு வாய்ப்புண்டு கூறியுள்ளதாக தெரிகிறது. இதை கேட்ட அவர் தன்னை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து செல்லும் படி குடும்பத்தினரை வற்புறுத்தி வீட்டுக்கு சென்றுள்ளார்.

டயாலிசிஸ்
இதில் கடந்த 19-ஆம் தேதி மீண்டும் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மீண்டும் 20-ஆம் தேதி டயாலிசிஸ் செய்ய அழைத்து செல்லப்பட்டார்.

உரிமை
அப்போதும் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் வயிற்று பகுதியில் ஓட்டை போட்டு 2 லிட்டர் தண்ணீர் செலுத்தி ரத்தத்தை சுத்தம் செய்வோம். இதில் நீங்கள் உயிரிழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என தெரிவித்தார். உடனே நாங்கள் இதை ஏன் நோயாளியிடம் தெரிவிக்கிறீர்கள் என கேட்டதற்கு இது எங்கள் பணி. சிகிச்சை குறித்து நோயாளி தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை அவருக்கு உள்ளது என்று கூறிவிட்டு சென்றார்.

புரோக்கர்கள்
இதை சொன்னதும் அன்வர் அலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டார். உடனே மருத்துவர்கள் சோதனை செய்த போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டபோது செவிலியர்கள் எப்போதும் நோயாளிகளிடம் கனிவாக மட்டுமே பேசுவர். எனவே இது போல் அன்வர் அலியிடம் பேசியது அவரை தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அங்கிருந்த புரோக்கர்கள் யாரேனும் சொல்லியிருக்கலாம் என பதில் அளித்தனர்.












Click it and Unblock the Notifications