வெயில் வெறுப்பேற்ற..வேதனையைக் கிளப்பும் TNEB? தலையில துண்டை போட்டுட்டு தான் போகனும்..குமுறும் கோவை!
கோவை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது அதே நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் வீட்டில் இருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதேபோல தொழில் துறையினரும் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
எரியுதுடி மாலா .. பேனா 12ஆம் நம்பர்ல வையி... தமிழ்நாட்டை கொண்டு போய் சூரியனுக்கு பக்கத்தில் வைத்தது யார்? போன்ற மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

100 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் தொடுவது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. தினமும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி மின்வெட்டு: இந்த நிலையில் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும் பகல் இரவு என எப்போதும் வெப்ப அலை வீசுவதால் ஏசி, ஃபேன், ஏர் கூலர் மற்றும் தொலைக்காட்சியின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. இதனால் மற்ற நாட்களில் இருப்பதை விட தற்போது அதிக மின்சார தேவையானது ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயர் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் பாதைகளிலும் பிரச்சனைகள் ஏற்படுவதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
கடும் அவதி: இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக பகல் நேரங்களில் வீடுகளில் இருக்கும்போது திடீர் மின்தடை ஏற்படுவது பொதுமக்களை மிகவும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை திட்டி அதிகம் பேர் பதிவிட்டு வருகின்றனர். மற்ற காலங்களை விட வெயில் காலங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருப்பதால் மின்தடை ஏற்படுவதாகவும், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக சரி செய்து வருவதாக மின்வாரியத்தினர் கூறி வருகின்றனர்.
அதிக மின் தேவை: மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக 20,000 மெகாவாட் மின் தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் மின்வெட்டு பெரிய அளவில் இல்லை என கூறுகின்றனர். அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் மின்வெட்டு அதிகரித்து வருவதாகவும் இதனால் தாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக ஈரோடு கோவை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
மின்வாரியம் விளக்கம்: கிரைண்டர் தயாரிப்பு, இயந்திரங்கள் தயாரிப்பு, தரிகள் மற்றும் பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பெரிய அளவிலான மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை என்றாலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் தொழில் துறையினர் மிகுந்த அவதி அடைந்துள்ளதாக கூறுகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்வதோடு தடையற்ற மின் சேவையை வழங்க வேண்டும் என கூறுகின்றனர். அதே நேரத்தில் கோவையில் தினமும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருவதாகவும், மின்சாரத்தை சீராக விநியோகிக்கும் 'ஃபீடர்' இயந்திரம் செயல்பட முடியாமல் திணறுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இருந்த போதும் மாற்று ஏற்பாடுகள் மூலம் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications