ஸ்தம்பித்த கோவை ரயில் நிலையம்.. விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்
கோவை: தீபாவளியைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்குச் சென்ற மக்கள் அனைவரும் 4 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று கோவை திரும்பியதால் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தீபாவளி பண்டிகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைளில் ஒன்றாகும். இந்தியாவில் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என ஊரே களைகட்டும். இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி வெகுவிமரிசையாக தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாட்பட்டுள்ளது.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். பயணிகளின் வசதிக்காக பண்டிகையையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐந்து நாள்கள் தொடர் விடுமுறையுடன் வந்ததால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனால், பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டினர். மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் குவிந்தனர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் கட்டணம் வசூலித்த போதிலும் பொதுமக்களின் கூட்டம் குறையவில்லை.
பல மாதங்களுக்கு முன்பிருந்து காத்திருந்தும், டிக்கெட் முன்பதிவு செய்தும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றனர். கோவையைப் பொருத்தவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றிருந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலரும் இன்று கோவைக்குத் திரும்பியுள்ளனர். சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பொதுமக்கள் பலரும் கோவைக்குத் திரும்பி வருவதால் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதேபோல, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், கவுண்டம்பாளையம் பேருந்து நிலையம், சாயிபாபா காலனி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகளின் மூலமும் சொந்த ஊர் சென்ற மக்கள் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications