கோவை நிகழ்ச்சியில் மோடிக்கு சர்ப்ரைஸ் தந்த சிறுமிகள் – பாதுகாவலர்களுக்கு பறந்த உத்தரவு
கோவை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்திருந்தார். தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மோடி பேசிக் கொண்டிருக்கும்போது, இரண்டு சிறுமிகள் பதாகைகளை ஏந்தி நின்றனர். ஒருவர் தமிழ்நாட்டின் பாஜக வளர்ச்சியை பற்றியும், மற்றொருவர் இந்திய பொருளாதாரம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்து மோடி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆன். ரவி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.

மோடி கோவை விசிட்
கோவை விமான நிலையத்தில் இருந்து கொடிசியா அரங்கம் வரை காரில் சென்ற மோடிக்கு, பாஜகவினர் சாலையின் 2 புறமும் நின்று வரவேற்பளித்தனர். பிறகு கொடிசியா அரங்கில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.18,000 கோடியை விடுவித்தார்.
கோவை மாவட்டத்தின் பெருமைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மோடி விரிவாக பேசிக் கொண்டிருந்தார். அரங்கத்தில் விவசாயிகள், விஞ்ஞானிகள், தன்னார்வலர்கள், தொழில் முனைவோர் மற்றும் பாஜகவினர் அமர்ந்திருந்தனர். அரங்கில் பாஜகவினர் அளித்த வரவேற்பை பார்த்து அவர், "பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது." என்று கூறினார்.
சிறுமிகள் பதாகை
தொடர்ந்து பிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, இரண்டு சிறுமிகள் பதாகைகளுடன் மோடியின் கவனத்தை ஈர்த்தனர். தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரிங்கா, மித்ரா ஆகிய இரண்டு சிறுமிகள் அரங்கில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். ஸ்ரிங்கா என்ற என்ற சிறுமி, "நான் படித்து முடித்து பட்டம் பெறும்போது இந்திய பொருளாதாரம் இரண்டாம் நிலையில் இருக்கும். நான் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது இந்தியாவின் பொருளாதாரம் முதல் நிலையில் இருக்கும். உங்களின் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி." என்று கூறியிருந்தார்.
மற்றொரு சிறுமியான மித்ரா, "எனக்கு ஓட்டுரிமை வருவதற்குள் தமிழ்நாட்டில் தாமரை மலரும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, "நீண்ட நேரமாக பதாகைகளை கம்பீரமாக ஏந்தியபடி நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் பதாகையில் இருந்த வாசகங்களை உன்னிப்பாக கவனித்தேன். அதை அருகில் உள்ள பாதுகாவலர்கள் மூலம் என்னிடம் கொடுங்கள்.
மோடி உறுதி
சிறுமிகளை பிறகு சந்திக்கிறேன். அவர்கள் பதாகையில் எழுதியிருந்ததையும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்." என பிரதமர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே கூறினார். அதன் பிறகு அங்கிருந்த பாதுகாவலர்கள் சிறுமிகளிடம் இருந்த பதாகைகளை மீட்டு மோடியிடம் ஒப்படைத்தனர். மோடியின் இந்த சம்பவம் சிறுமிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications