‘வணக்கம் பழனிசாமி’ கோவையில் மோடி – இபிஎஸ் சந்திப்பு.. பரபரக்கும் அரசியல் களம்
கோவை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அரசியல் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. பீகார் தேர்தல் நிலவரம், எஸ்ஆர் பணிகள் போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார். மோடி இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்தாலும், அவரின் இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. முக்கியமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மோடியை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. பீகார் சட்டமன்ற தேர்தல் நிதிஷ் - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக முடிந்துள்ளது. அதே நம்பிக்கையில் பாஜக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. எப்படியாவது திமுகவிடம் இருந்து ஆட்சியை பறிக்க அதிமுகவுடன் கூட்டணி அமைத்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

மோடி கோவை விசிட்
திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் சில 3 மாதங்களுக்குள் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாவதற்கு வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவம்பர் 19 ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். ஆந்திராவில் காலை சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் மோடி பங்கேற்கிறார். அதன் பிறகு கோவை வரும் பிரதமர் மோடி மதியம் 1.30 மணியளவில் கொடிசியா மைதானத்தில் நடைபெறும், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
இயற்கை வேளாண்மை மாநாடு
இந்நிகழ்ச்சியின்போது மோடி புதிய திட்டங்களை தொடங்கி வைத்து உரையாடவுள்ளார். நீடித்த, சுற்றுச்சூழலுக்கேற்ற, ரசாயனம் இல்லாத வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்திற்காக சாத்தியமிக்க, பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள்உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை துரிதப்படுத்துவதையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், இயற்கை வேளாண் முறையை பின்பற்றுவோர், விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருட்கள் விநியோகிப்போர், விற்பனையாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
மோடியின் இந்த விசிட் இயற்கை விவசாயத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அரசியல் களத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தப் பயணத்தின் போது மோடி பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில முக்கிய அரசியல் சந்திப்புகளை நிகழ்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - மோடி கோவையில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், அதிமுகவில் உள்ள பிரச்சனைகள், கூட்டணி சிக்கல்கள், தேர்தல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடப்பாடியுடன் மோடி பேசவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications