அரெஸ்ட், ஜாமீன், ரிலீஸ் ரீப்பீட்டு! சிறை வாசலிலேயே மேளம் அடித்த பாஜகவினர்.. மீண்டும் பாயந்தது வழக்கு
கோவை: சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை மீறி வரவேற்பு கொடுத்த தொண்டர்கள் மீது போலீசார் முக்கிய நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்பி ஆ ராசா பேசிய விவகாரம் சர்ச்சையானது. அவரது கருத்து வலதுசாரிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
மேலும், ஆ ராசாவுக்கு எதிராகத் தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக பாஜகவினர் இந்த விவகாரத்தில் பல போராட்டங்களை நடத்தினர்.
மீண்டும் சவார்க்கரை தொட்ட ராகுல் காந்தி.. பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு வந்ததே கோபம்! ஆவேச பதிலடி
மறியல்
அப்படித்தான் கோவையிலும் ஆ ராசாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஆ.ராசா குறித்தும், தந்தை பெரியார் குறித்தும் இழிவாகப் பேசியதாகக் கூறி பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் பீளமேடு காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
ஜாமீன்
இந்தப் போராட்டத்தில் தமிழக முதல்வர் புகைப்படங்களைக் கிழித்தும், கொடும்பாவி எரித்தும் ரகளையில் ஈடுபட்ட 11 பாஜகவினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் அனைவரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே சிறையில் இருந்த பாலாஜி உத்தம ராமசாமிக்கு ஜாமீன் கிடைத்தால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
வரவேற்பு
இந்தச் சூழலில் ஜாமீன் கோரி கைது செய்யப்பட்ட 11 பாஜக தொண்டர்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அவர்களுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், நேற்று மாலை அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்தனர். அப்போது அவர்களை வரவேற்க அங்கு ஏராளமான பாஜக தொண்டர்கள் கூடி இருந்தனர். பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியும் அங்கு இருந்தார்.
மேளதாளம் முழங்க
சிறையில் இருந்து வெளியே வரும் பாஜகவினர் வரவேற்க மேளதாளங்கள் ஏற்படு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், போலீசார் மேளதாள வரவேற்பு அளிக்க அனுமதிக்கவில்லை. இருப்பினும், அதையும் மீறி அங்குக் கூடி இருந்த பாஜகவின் சிறையில் இருந்து விடுதலையானவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது போலீசார் வந்து எச்சரித்த போதிலும், பாஜகவினர் தொடர்ந்து மேளம் அடித்தாக கூறப்படுகிறது.
எச்சரிக்கை
இதன் காரணமாக அங்கு போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசாருடன் பாலாஜி உத்தம ராமசாமி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் பல முறை எச்சரித்தும் பாலாஜி உத்தம ராமசாமி வாக்குவாதத்தை நிறுத்தவில்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும், சிறையில் இருந்து வெளியில் வந்த 11 பேரையும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
வழக்குப்பதிவு
மேலும், சித்தாபுதூர் பாஜக அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் அவர்களை வரவேற்றனர். இந்தச் சூழலில் போலீசார் விடுத்த எச்சரிக்கையை மீறிச் செயல்பட்டதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 6 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.