தலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சர்ச்சையாக பேசி வீடியோ வெளியிட்ட பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
கோவை: அருந்ததியர் சமூகத்தினர் பற்றி ஆபாசமாகவும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்த பெண் ஒருவரை கைது செய்ய கோரி போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கையில் கேமராவுடன் செல் இருந்தால் கண்டதையும் பேசி கலவரத்தைத் தூண்டும் கும்பல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். பொறுப்பில்லாத இவர்களால் சமூக நல்லிணக்கம்தான் கெடுகிறது.
சில தினங்களாகவே வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் பேசுகிறார். பார்ப்பதற்கு ரொம்ப டீசன்ட்டாக தெரியவும், ஏதோ நல்ல விஷயம் பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
அதிர்ச்சி
ஆனால் வாயை திறந்ததும், பச்சை, பச்சையாக பேசுகிறார். குறிப்பாக தலித் மக்களை இழிவாகவும், கீழ்த்தரமாகவும் அந்த வீடியோவில் பேசுகிறார். இந்த வீடியோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமில்லாமல், தமிழக மக்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.
மனு
இந்நிலையில், சமூக வலை தளங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி அவதூறாக பேசிய இந்த பெண்ணை எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி சமூக ஆர்வலர் பெரியார் மணி கோவை மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
வீடியோக்கள்
சமீக காலமாகவே, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி ஒரு சிலர் வீடியோ வெளியிட்டு மக்களின் அமைதியை குலைத்து வருவது நடந்து வருகிறது. இது சம்பந்தமாக காவல்துறை விழிப்பாக இருந்து பல நடவடிக்கைகளை எடுத்தாலும், சோஷியல் மீடியாவில் வன்முறை தூண்டும் விதத்தில் வெளிவரும் வீடியோக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
பயம்
படித்த பெண், நாகரீகமான ஒரு பெண்.. இவ்வளவு அசிங்கமான, கெட்ட வார்த்தைகளை பேசுவாரா என்பது பொதுவான கேள்வியாகவும், இதை பார்த்தால் இன்றைய இளைஞர்கள் மனதில் என்ன விதைக்கப்படும் என்ற பயமும் நம்மையும் அறியாமல் வந்து போகிறது.