கோவையில் மோடி ரோடு ஷோ.. காவல்துறை அனுமதி மறுப்பு.. பாதுகாப்பு இல்லை என கடிதம்
கோவை: பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலாது என மாநகர காவல் ஆணையாளர் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. பிரதமர் மோடி வரும் 18ஆம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் வழக்கமாக அவர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார். ஆனால், இந்த முறை , பொதுக் கூட்டத்துக்கு பதில், ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

மோடி வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ்குமார், பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ஆம் தேதி கோவை கவுண்டம்பாளையத்தில் 'ரோடு ஷோ' நிகழ்வைத் தொடங்கி வைத்து அதில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக, ஆர்.எஸ்.புரம் சென்று, அங்குள்ள தலைமை அஞ்சல் நிலையம் சந்திப்பு அருகே இந்த ரோடு ஷோ முடிவடைகிறது என்று தெரிவித்தார்.
பிரதமர் வருகையையொட்டி கோவையில் இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் தேதி 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி குழுவினர் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனையானது சுமார் இரண்டு மணி நேரமாக நடந்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். வருகிற 18ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதாலும் இதுவரை கோவை மாவட்டத்தில் எந்த ஒரு ரோட் ஷோ போன்ற நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கவில்லை.
பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரோடு ஷோ நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மருத்துவமனைகள் இருப்பதாலும் அனுமதி மறுப்படுவதாக காவல்துறை ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications