கோவையில் மாணவர்களை அலறவிட்ட போலீசார்.. அலர்ட் செய்த உளவுத்துறை.. ரூம்களில் புகுந்து திடீர் ரெய்டு!
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் பகுதிகளில் இன்று போலீசார் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். மாணவர்களின் அறைகளில் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் கடந்த மாதம் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில் கஞ்சா, ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் அறை எடுத்து தங்கியிருக்கும் வீடுகளில் இன்று தனிப்படை காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குனியமுத்தூர், ஈச்சனாரி, கோவைபுதூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா போன்ற போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று இந்த ரெய்டு நடந்துள்ளது.
வெளிமாநில குற்றவாளிகள் மற்றும் கஞ்சா சப்ளை செய்யும் நபர்கள், கல்லூரி மாணவர்களுடன் தங்கி இருந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் வேறு யாரேனும் தங்கி இருக்கிறார்களா சட்ட விரோத பொருட்கள், போதைப் பொருட்கள் இருக்கின்றனவா என சோதனை நடைபெற்றுள்ளது.
கோவையில் முக்கியமான கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளான பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி, கோவைபுதூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications