நடு ரோட்டில் தீப்பிடித்து மளமளவென எரிந்த அரசு பேருந்து.. கோவை அருகே இன்று ஷாக் சம்பவம்!
கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்த போது திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை பொள்ளாச்சியை சேர்ந்த சுரேஷ் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். நடத்துநராக பொள்ளாச்சியை சேர்ந்த கதிரேசன் என்பவர் பணியில் இருந்தார். இந்தப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அரசுப் பேருந்து காலை 8 மணியளவில் மயிலேறிபாளையத்தை கடந்து ஒத்தக்கால் மண்டபம் பாலம் நோக்கி வந்து கொண்டிருந்த போது பேருந்தின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் சுரேஷ் உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார்.
அதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார். உடனே பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களில் பேருந்தில் தீப்பிடித்தது. சாலையில் நின்ற பேருந்து கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் செட்டிபாளையம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்க முயன்றனர். சில மணி நேரம் போராடி பேருந்தில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
அரசுப் பேருந்து, திடீரென சாலையிலேயே தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து, பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கியதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications