பொள்ளாச்சி கொடூரம்… வீடியோவில் இருப்பது நான் அல்ல… பார் நாகராஜ் பேட்டி
Recommended Video
கோவை: பொள்ளாச்சியில் லேட்டஸ்டாக நேற்று வெளியான 4 வீடியோக்களில் இருப்பது தாம் அல்ல என்று பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தன் மீது தவறாக குற்றம் சாட்டப்படுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், தனக்கு பாதுகாப்பு அளிக்கவும் பார் நாகராஜன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார் நாகராஜன், அதிமுகவில் இருப்பதால் தம் மீது குற்றம்சாட்டப்படுகிறது என்றார். கட்சி தலைவர்களுடன் மட்டுமே தனக்கு பழக்கம் உள்ளதாக கூறிய அவர், அரசியலில் இருப்பதால் திருநாவுக்கரசு, வசந்தகுமார் உள்ளிட்டோர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக விளக்கமளித்தார்.
தான் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும் போலீஸ் அறிவுறுத்தலின்படி சொந்த கிராமத்தில் தான் உள்ளதாகவும் பார் நாகராஜ் தெரிவித்தார்.
எல்லோருமே என்னை தவறாகவே சித்தரிக்கிறார்கள் நேற்று வெளியான வீடியோவில் இருப்பது சதீஷ் என்ற நபர் என்றும் இதனை நிரூபிக்க, தான் தயார் என்றும் அவர் கூறினார்.
வீடியோவில் நான் இருந்தால் தாராளமாக சட்டப்படி நடவடிக்கை எடுங்கள், இல்லாவிட்டால் பொதுமக்களே எனக்கு தண்டனை தரட்டும் என்றும் கூறினார்.
அரசியல் ரீதியாக ஆகாதவர்கள் என்னை வைத்து பலரை பழிவாங்க முயற்சிக்கிறார்கள் என்றும் பார் நாகராஜ் தெரிவித்தார்.
இந்த வழக்கை பொறுத்தவரை போலீசாருக்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் கூறினார்.
முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பார் நாகராஜுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.