அதிமுக யாருக்கும் அடிமை கட்சி இல்லைங்க... சிங்கம் போன்றதுங்க -பொள்ளாச்சி ஜெயராமன்
கோவை: அதிமுக யாருக்கும் அடிமை கட்சி கிடையாது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை சிங்கம் போன்று ஜெயலலிதா விட்டுச்சென்றுள்ளதாகவும் தமிழகத்தில் வலிமையான கட்சி என்றால் அது அதிமுக தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
அவரும் வேண்டாம்.. இவரும் வேண்டாம்.. மூன்றாவது ஒருவரை முதல்வராக முன்னிறுத்தினால்? அதிமுக வியூகம்
துரைசாமி மூட்டிய தீ
பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி மூட்டிய அரசியல் தீ மூன்று நாட்களை கடந்தும் எரிந்து வருகிறது. நேற்று முன் தினம் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.பி.துரைசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என்றும், தமிழகத்தில் போட்டியே திமுக-பாஜக இடையே தான் எனவும் கூறினார். இதன் மூலம் அதிமுகவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்ற தொணியில் அவர் பேசியிருந்தார்.
அதிமுக பதிலடி
வி.பி.துரைசாமி பேட்டி கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததால் அன்றையே தினம் மாலையே செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய ஜனநாயக கூட்டணி தொடருகிறது என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் வி.பி.துரைசாமியின் கருத்து அதிமுக முன்னணி தலைவர்களை கோபம் கொள்ளச் செய்தது. அதன் விளைவாகவே வி.பி.துரைசாமியை அரசியல் லாபம் தேடி ஓடுகிறவர் கருத்திற்கு அதிமுக பதில் சொல்லாது என கே.பி.முனுசாமி எம்.பி.சாடியிருந்தார்.
முத்தரசன் கருத்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சேலத்தில் நேற்று பேட்டியளித்த போது, பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையை போல் ஆகிவிட்டது அதிமுக நிலை என விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக யாருக்கும் அடிமை கட்சி கிடையாது எனக் கூறியுள்ளார்.அதிமுகவை ஜெயலலிதா சிங்கம் போன்று விட்டுச் சென்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
குறை சொல்வது வேலை
வி.பி.துரைசாமி பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழகத்தில் வலிமையான கட்சி என்றால் அது அதிமுக தான் எனவும் இதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குறை சொல்வது தான் வேலை என்றும் அவருக்கு அதை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது எனவும் விமர்சித்தார்.