930 கோடி மோசடி.. பெண் இயக்குநரை கடத்தி பணம் பறித்த வழக்கு.. பிரமோத் குமார் ஐபிஎஸ் மனு தள்ளுபடி
கோவை: திருப்பூரில் பாசி நிறுவன மோசடி புகாரில் தொடர்புடைய பெண் இயக்குனரை கடத்தி 2.5 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பிரமோத்குமார் ஐபிஎஸ்யை விடுவிக்க கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பிரமோத்குமார் ஐபிஎஸ் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருப்பூரில் பாசி போரக்ஸ்' என்ற பெயரில் ஆன்லைன் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிதி நிறுவனம் திருப்பூர் பகுதியில் சுமார் 58500 பேரிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. கொங்கு மண்டலம் முழுவதும் பலர் ஏமாந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்ததது. இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.930 கோடி மோசடி வழக்கில் பாசி போரக்ஸ் நிறுவத்தின் இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு தலா 27 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், 171 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.
முன்னதாக வழக்கு பதிவு செய்யும் போது, மோசடி தொடர்பாக விசாரித்த போலீசார் தன்னை கடத்தி 3 கோடி ரூபாய் பறித்ததாக கமலவள்ளி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரித்த சி.பி.ஐ. அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமார் மற்றும் திருப்பூர் டி.எஸ்.பி ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ் சண்முகையா மற்றும் ஜான்பிரபாகர் மீது தனி வழக்கு பதிந்து 2012ல் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்..
இவர்கள் மீது கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே சி.பி.ஐ. தன் மீது பதிந்த வழக்குக்கு எதிராக பிரமோத் குமார் ஐபிஎஸ் தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
இதனிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஜான் பிரபாகர் என்பவர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் கடந்த ஆண்டு வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்ய கோவை சி.பி.ஐ. நீதிமன்றம் ஆஜராகுமாறு ஐந்து பேருக்கும் சம்மன் அனுப்பியது.. இதில் பிரமோத்குமார் ஐபிஎஸ் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பித்து நீதிபதி கோவிந்தராஜன் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பிரமோத் குமார் ஐபிஎஸ் கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வரும், உடனடியாக சிபிஐ நீதிமன்றத்தில் அக்டோபர் மாதமே சரணடைந்தார். இந்நிலையில் திருப்பூரில் பாசி நிறுவன மோசடி புகாரில் தொடர்புடைய பெண் இயக்குனரை கடத்தி 2.5 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பிரமோத் குமார் ஐபிஎஸ் கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாசி நிறுவன மோசடி புகாரில் தொடர்புடைய பெண் இயக்குனரை கடத்தி 2.5 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பிரமோத்குமார் ஐபிஎஸ்யை விடுவிக்க மறுத்துவிட்டார்.மேலும் பிரமோத் குமார் ஐபிஎஸ் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications