கோவையில் ரேபிஸ் நோய் பாதித்த சிறுவன் உயிரிழப்பு.. வெறிநாய் கடித்ததால் நேர்ந்த சோகம்
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மதிகிஷோர் என்ற 15 வயது சிறுவனை வெறிநாய் கடித்துள்ளது. இதில், மதிகிஷோருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுவனுக்கு கடந்த ஒன்பதாம் தேதி திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுவனின் பெற்றோர் தங்களது மகனை அங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனுக்கு வெறிநாய்க் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், நோய் பாதிப்பு முற்றியதால் நாயின் செயல்பாடுகளை அந்த சிறுவன் செய்யத் தொடங்கியுள்ளான். இதையடுத்து, அந்த சிறுவனை உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெறிநாய்க்கடி சிகிச்சை வார்டில் சிறுவனை அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். ரேபிஸ் நோய் பாதித்ததால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications