சாயிபாபா காலனி பக்கம் போனா இந்த கம்பத்தை கவனிங்க.. அசத்தல் ஐடியாவை இறக்கிய அதிகாரிகள்
கோவை: கோவை முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து போக்குவரத்து நெருக்கடி ஆகி வருகிறது. சாய்பாபா காலனி - சிவானந்தா காலனி ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கின. இதையடுத்து அதிகாரிகள் அங்கு எச்சரிக்கை கம்பத்தை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

முக்கியமாக கோவை மாநகரிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை விடுக்கப்பட்டிருந்தது. இன்றும் கூட கோவையில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது.
கோவை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு மக்களுக்கு சிரமத்தை தந்தது.
பல முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறு போல ஓடியது. சாய்பாபா காலனி - சிவானந்தா காலனி வழித்தடத்தில் உள்ள ரயில்வே மேம்பாலம் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. எப்போது மழை பெய்தாலும் அங்கு அதிகளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் பேருந்து சிக்கிவிட்டது. தீயணைப்புத்துறை விரைந்து சென்று பயணிகளையும், பேருந்தையும் பத்திரமாக மீட்டனர். அதற்கு அடுத்த நாளான திங்கள் கிழமை, அதே பகுதியில் ஒரு அரசுப் பேருந்து சிக்கிவிட்டது. அதையும் தீயணைப்புதுறையினர் மிகவும் சிரமப்பட்டு மீட்டனர்.
இதனால் அந்த வழித்தடத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னைக்கு அதிகாரிகள் ஒரு தீர்வை கண்டறிந்துள்ளனர். வாகன ஓட்டிகள் மழை வரும் போது மேம்பாலத்துக்கு கீழ் தண்ணீரின் அளவை அறிந்து கொள்ளும் வகையில் பச்சை மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் இரண்டு புறமும் கம்பம் நட்டுள்ளனர்.
போக்குவரத்து சிக்னல் அடிப்படையில் தான் இதையும் வடிவமைத்துள்ளனர். பச்சை நிறம் தெரிந்தால் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல செல்லலாம், மஞ்சள் நிறம் தெரிந்தால் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். சிவப்பு நிறம் தெரிந்தால் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என்ற அடிப்படையில் இதை வடிவமைத்துள்ளனர். இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை, மஞ்சள் நிறம் தெரிந்தாலே அந்த வழித்தடத்தில் பயணிக்காமல் இருப்பது நல்லது என்றும் கூறியுள்ளனர்.
சிவப்பு நிறம் தெரிந்தால் போக்குவரத்து காவலர்கள் உடனடியாக அந்தப் பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி விடுவர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர், கிராந்தி குமார்பாடி, முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் பேருந்துகள், கனரக வாகனங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக சாய்பாபா காலனி ரயில்வே தரைப்பாலத்தில் இந்த கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இது எப்படி செயல்படுகிறது என்பதை பொருத்து, கோவையில் உள்ள அனைத்து மேம்பாலங்களிலும் கம்பங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. என்று=== கூறினார்.












Click it and Unblock the Notifications