என்னாலேயே முடியலை.. ரஜினியாலும் முடியாது.. திருநாவுக்கரசர் பலே பேச்சு!
கோவை: தனிக் கட்சி நடத்துவதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று. கமலைப் பார்த்தீங்களா. இதே போலத்தான் யார் கட்சி ஆரம்பித்தாலும் நடக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேசியிருக்கிறார்.
பல்வேறு கட்சிகளில் இருந்து கடைசியாக காங்கிரஸுக்கு வந்து சேர்ந்தவர் திருநாவுக்கரசர். இடையில் தனிக் கட்சியெல்லாம் கூட நடத்திப் பார்த்தார். ஆனால் எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் கதையாகத்தான் இருந்தது இவரது கட்சி.
இறுதியில் தனிக்கட்சியை மூட்டை கட்டி விட்டு பாஜகவுக்குப் போனார். எம்பியாக இருந்தார், மத்திய அமைச்சராக கூட வலம் வந்தார். தற்போது காங்கிரஸில் இருக்கிறார் திருநாவுக்கரசு.

தனிக் கட்சி குறித்து அதிருப்தி
திருநாவுக்கரசு திமுக கூட்டணியில் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது தனிக் கட்சி நடத்தினால் உருப்பட முடியாது என்று அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

ரஜினிக்கு எதிராக திரும்புவாரா
திருநாவுக்கரசர் பேச்சைப் பார்த்தால் ரஜினி தனிக் கட்சி ஆரம்பிக்கக் கூடாது. ஏதாவது கட்சியில் சேர வேண்டும் என்று அவர் சொல்ல வருகிறாரா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. காரணம், தனது பேச்சின்போது நல்லவேளை ரஜினி கட்சி ஆரம்பிக்கலை, தப்பித்து விட்டார் என்று கூறினார் திருநாவுக்கரசு.

கமல் நிலையைப் பாருங்க
திருநாவுக்கரசர் பேசியபோது, கமல் நிலையைப் பார்த்தீங்களா. ஒன்னுமே நடக்கலை பாருங்க. தனிக்கட்சி ஆரம்பித்தால் இப்படித்தான் இருக்கும். நானும் கூடத்தான் ஆரம்பித்தேன். எதுவும் நடக்கலை. ஆசைப்பட்டுக்கலாம், நானும் முதல்வர் ஆவேன்னு. ஆனால் நடக்கணுமே என்று கூறினார் திருநாவுக்கரசர்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநாவுக்கரசர் பேச்சால் ரஜினி ரசிகர்களும் கூட அதிர்ச்சியாகியுள்ளனர்.. காரணம், ரஜினிக்கு நெருக்கமானவர்களில் ஒருவர் திருநாவுக்கரசர் என்பதால். ஒரு வேளை ரஜினியை பாஜக பக்கம் போக விடாமலும், தனிக்கட்சி ஆரம்பிக்க விடாமலும் பார்த்துக் கொள்ளும் வேலையை திருநாவுக்கரசர் கையில் எடுத்துள்ளாரா என்றும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications