ராமஜெயம் கொலை வழக்கு.. சிபிசிஐடியிடம் முக்கிய துப்பு.. சூடுபிடித்த விசாரணை! விரைவில் விலகும் மர்மம்?
கோவை: ராமஜெயம் கொலை வழக்கில் உள்ள மர்மங்கள் வெகு விரைவில் அகலும் என தெரிகிறது. கொலையாளிகளை சிபிசிஐடி போலீஸார் நெருங்கியதாகவே தெரிகிறது.
Recommended Video
திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 10 ஆண்டு காலமாக கொலையாளிகள் யார் என்று நெருங்கவே முடியவில்லை.
ராமஜெயம் கொலை வழக்கு.. முக்கிய துப்பாக
சிறப்பு புலனாய்வுக் குழு
ராமஜெயம் கொலை வழக்கை தற்போது காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. ராமஜெயம் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்க்கொள்ளபட்டது. ராமஜெயம் சகோதரர் அமைச்சர் நேருவிடம் இரண்டு முறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போன் எண்
இந்த நிலையில் இந்த வழக்கில் துப்பு கொடுத்தால் ரூ 50 லட்சம் பணம் வெகுமதியாக வழங்கப்படும் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக சில போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான போஸ்டரை திருச்சி முழுவதும் சிபிசிஐடி போலீஸார் ஒட்டியிருந்தனர்.
சுங்கச் சாவடி
இந்த நிலையில் சுங்கச்சாவடியில் சிசிடிவி கேமராக்களில் குறிப்பிட்ட ஒரு காரில் கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த காரை கண்டறிந்தால் கொலையாளியை நெருங்கிவிடலாம் என்பதால் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர்.
என்ன கார்
அந்த கார் வெர்ஷா வேன் என தெரியவந்துள்ளது. இதையடுத்து வெர்ஷா வேன் வைத்திருப்போரின் பட்டியலை சிபிசிஐடி போலீஸார் எடுத்து வந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் 1400 வெர்ஷா வேன்கள் இருக்கிறது. அவற்றில் கோவையில் மட்டும் 250 வெர்ஷா வேன்கள் உள்ளன.
கோவை விசாரணை
இதனால் கோவையில் உள்ள வெர்ஷா வேன்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினால் வழக்கிற்கு ஏதேனும் துப்பு கிடைக்கும் என போலீஸார் நம்புகிறார்கள். அந்த 250 கார்களிலும் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்டது, விற்கப்பட்டது எவை என்பதையும் ஃபில்டர் செய்து விசாரணையை கோவை மாவட்டத்தில் முடுக்கிவிட்டுள்ளனர். கொலையாளிகளை போலீஸார் நெருங்கியதாகவே கருதப்படுவதால் விரைவில் ராமஜெயம் கொலை வழக்கில் மர்மம் விலகும் என தெரிகிறது.