அதிகாலையில் கொடூரம்.. தம்பதியை தாக்கி செயின் பறிப்பு.. கோவையில் கொள்ளையர்கள் கைவரிசை
கோயம்புத்தூர்: கோவை அருகே, வீட்டினுள் புகுந்து தம்பதியரை கடுமையாக தாக்கி கொள்ளையர்கள் செயினை பறித்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள ஆயம்மாபுதூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி - ராதாமணி தம்பதியர் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் கலைவாணன், மகள் சந்தியா, மருமகன் பிரதீப் உள்ளிட்டோர் அதே வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறைகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை சுப்பிரமணியின் வீட்டிற்கு வந்த மூன்று திருடர்கள், மேல் தளத்திற்கு சென்று கலைவாணன்,சந்தியா, பிரதீப் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராதபடி, முதல் தளத்தை தாழிட்டு அடைத்தனர். கீழ்தளத்தில் இருந்த சுப்பிரமணி - ராதாமணி தம்பதியினரின் வீட்டின் முன் கதவு தாழிடப்படாமல் இருந்தது. இதனை நோட்டமிட்ட திருடர்கள், வீட்டின் உள்ளே புகுந்து, தம்பதியரை சரமாரியாக தாக்கியதோடு, ராதாமணி அணிந்திருந்த தங்க செயினையும் பறித்தனர்.
பின்னர், எதிரே உள்ள காட்டுப் பகுதிக்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை விடாமல் தம்பதியர் துரத்திச் சென்ற நிலையில், அவர்கள் மீது கல், இரும்பு கம்பிகளை வீசியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டனர்.
இந்நிலையில் மேல் மாடியில் வசித்து வந்த கலைவாணன், சந்தியா, பிரதீப் உள்ளிட்டோர் கீழே நடக்கும் சம்பவங்கள் தெரிந்த பின்னர், வெளியே வர முற்பட்டனர். வீட்டைவிட்டு வெளியே முடியாதபடி கதவு தாளிடப்பட்டதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்த தகவலின்பேரில், மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி,அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா உள்ளிட்டோர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே வசிக்கும் பழனிச்சாமி என்பவரின் இருசக்கர வாகனமும் திருடு போய் உள்ளது. இதுகுறித்தும் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications