கோவையில் அதிரடி.. ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. 2 கால்களிலும் பாய்ந்த குண்டுகள்
கோவை: கோவையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆல்வின் தலைமை காவலரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற நிலையில் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆல்வினின் 2 கால்களிலும் குண்டுகள் பாய்ந்தன.
கோவை மாநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தவர் ஆல்வின். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரது பெயர் போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளது.

ஆல்வினுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆல்வினை பிடிக்க கோவை தனிப்படை போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே தான் போலீசாருக்கு நேற்று நள்ளிரவு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
அதாவது ரவுடி ஆல்வின் கோவை கொடிசியா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கொடிசியா பகுதிக்கு சென்று ஆல்வின் பதுங்கிய இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை பார்த்த ஆல்வின் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அந்த சமயத்தில் தலைமை காவலர் ராஜ்குமார், ஆல்வினை பிடித்தார்.
இதனால் கோபமடைந்த ஆல்வின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலைமை காவலர் ராஜ்குமார் கையில் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடினார். போலீசார் அவரை சரணடைய கூறினர். ஆனால் அவர் சரண் அடையாமல் எஸ்கேப் ஆக முயன்றார். அதுமட்டுமின்றி பிடிக்க சென்ற போலீசாரை தொடர்ந்து தாக்கவும் முயற்சித்தார்.
இந்த வேளையில் உதவி காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு சரணடையும்படி எச்சரிக்கை செய்தார். ஆனால் ஆல்வின் தொடர்ந்து ஓடியதோடு அவரை நெருங்கிய போலீசாரை கத்தியால் குத்தவும் முயன்றார். இதனால் பாதுகாப்பு கருதி உதவி காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், ஆல்வினை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டார். இதில் ஆல்வினின் 2 கால்களிலும் குண்டுகள் பாய்ந்தன.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேபோல் ஆல்வின் கத்தியால் குத்தியதில் காயமைடைந்த தலைமை காவலர் ராஜ்குமாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications